நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் டுவிட்டர் கணக்குகளை முடக்கியதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்த கட்சியின் நிர்வாகிகளான பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டு உள்ளது. இதே போல மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் டுவிட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறும் கனிமவள கொள்ளை, மணல் குவாரி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காகவும், திமுக மற்றும் பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு கருத்துகளை நாம் தமிழர் கட்சி தெரிவித்து வருகிறது.

இதனால் இந்த கணக்குகள் முடக்கப்பட்டதாக கூறப்பட்டு சமூக வலை தளத்தில் பரவியது. ஆனால் இந்த தகவலை சைபர் கிரைம் போலீசார் மறுத்துள்ளனர். சீமான் டுவிட்டர் பக்கத்தை முடக்க தாங்கள் எந்த புகாரும் தெரிவிக்கவில்லையென தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் டுவிட்டர் பக்கம் முடக்கம் தொடர்பாக டுவிட்டர் விளக்கம் அளித்துள்ளது. அதில், உங்கள் (சீமான்) டுவிட்டர் கணக்கு குறித்து இந்திய அரசிடம் இருந்து டுவிட்டர் அதிகாரப்பூர்வ கடிதங்களை பெற்றுள்ளது. உங்கள் கணக்கு இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 விதியை மீறுவதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal