வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க.வினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியிருக்கிறார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்வதாக இருந்தது. இதை சற்றும் எதிர்பாராத அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்கின் ஆதரவாளர்கள், வருமான வரித்துறையினரை தங்கள் பணியை செய்யவிடாமல் அச்சுறுத்தியதோடு, அவர்களின் வாகனங்களையும் சேதப்படுத்தி உள்ளனர்.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு, அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் சூழலில், வருமான வரித்துறை அதிகாரிகள் மீது திமுகவினர் நடத்திய வன்முறை தாக்குதல், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சூழலை பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது.

வருமான வரித்துறையினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை, தங்கள் வருமான வரி சோதனை குறித்து தகவல் வராததால் பாதுகாப்பு வழங்கமுடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். வருமான வரித்துறையினர் வந்து திமுகவினருக்கு மட்டும் தெரிந்து, உடனடியாக சோதனை நடைபெறும் இடத்தில் கூட்டம் சேர்ந்த போது, காவல்துறையினர் விரைந்து செல்லாதது ஏன்?

சட்டத்திற்கு புறம்பான பரிவர்த்தனை சம்மந்தமான ஆவணங்கள், சொத்து விவரங்கள், நகை, பணம் ஆகியவற்றை பதுக்க வருமான வரித்துறை சோதனை தடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. வருமான வரித்துறையினர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக நடந்து கொண்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வருமான வரித்துறையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க தவறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal