மதுவிலக்கு விவாகாரத்தில் அதிமுக போராடத் தொடங்கினால் அவர்களுடன் இணைந்து போராட தயாராக இருப்பதாக எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை விசிக தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்துள்ளது வேதனை அளிக்கிறது.

டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நிலையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளார். இருப்பினும் மத்திய அரசு மதுவிலக்கை ஒழித்தால் மட்டுமே கள்ளச்சாராயத்தினை ஒழிக்க முடியும். இந்தியா முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படும் நிலை உள்ளது.

தமிழக முதலமைச்சர் மதுவிலக்கைக் கொண்டு வரவேண்டும். கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோரின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். சாராயத்தினால் கணவரை இழந்து வாடும் விதவைகளை அரசே தத்தெடுக்க வேண்டும். குடிநோயை கட்டுப்படுத்த மையங்கள் அரசே நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் மதுவிலக்கை உடனே கட்டுப்படுத்த முடியாது என்றாலும் படிப்படியாக தமிழக அரசு கொண்டு வரவேண்டும். முண்டியம்பாக்கம் சாராயம் அருந்திய நோயாளிகளுக்கு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மெத்தனால் சாராயம் அருந்தினால் காப்பாற்றறுவதற்கான மருந்துகள் இருந்தால் அதனை தமிழக அரசு கொண்டு வந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

மதுவிலக்கு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போராட தயார் என்றால் அவர்களுடன் இணைந்து நாங்களும் போராட தயாராக உள்ளோம் என கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal