தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 23ந்தேதி முதல் அடுத்த மாதம் 2ந்தேதி வரை ஜப்பான் உள்ளிட்ட நான்கு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தமிழகத்தை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் வகையில் தொடர் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 2024 ஜனவரி மாதம் 11, 12-ந் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அனைத்து முயற்சிகளும் தற்போதே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றார். துபாய், அபுதாபியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பின் மூலம், 9,700 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ரூ.2,600 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அடுத்தக்கட்டமாக முதலீட்டாளர்களை சந்திக்க வரும் மே 23-ந்தேதி இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் நாடுகளுக்கு செல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு, அதற்கான அனுமதி மத்திய அரசிடம் கோரப்பட்டது.

இந்த அனுமதி கிடைத்து உள்ளது. இதையடுத்து வரும் 23-ந்தேதி முதல் ஜூன் 2-ந்தேதி வரை முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பயணத் திட்டம் தொடர்பாக கடந்த 2-ந்தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விவரிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal