‘மார்ச் மாதம் வெளியாகும் பட்ஜெட்டில் குடும்பத் தலைவிக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும்’ என ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா. மறைவால் காலியான ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கி விட்டது. கடந்த பொதுத் தேர்தலைப் போலவே, இடைத்தேர்தலிலும் இந்தத் தொகுதி தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

அந்தக் கட்சியின் சார்பில், மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்பட்டு உள்ளார். தே.மு.தி.க.வின் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன், சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டி போடுகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் பிரச்சாரம் செய்து வருகிறார். சம்பத் நகரில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘திராவிட இயக்கத்தின் சொல்லின் செல்வராக திகழ்ந்தவர் ஈ.வி.கே. சம்பத். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வந்ததற்கான சூழல் உங்களுக்கு நன்றாக தெரியும். ஈவிகேஎஸ். இளங்கோவனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

புதுச்சேரியில் அடிபட்டு கிடந்த கருணாநிதியை பெரியார் அரவணைத்தார். ஈ.வி.கே. சம்பத் மகனுக்காக கருணாநிதியின் மகன் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். மறைந்த திருமகன் ஈ.வெ.ரா தொகுதி வளர்ச்சி, மக்கள் பிரச்சினைக்கு பேரவையில் குரல் கொடுத்தார். திமுகவின் அடித்தளமே ஈரோடுதான். மகனின் கடமையை செய்து முடிக்க தந்தை வந்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம்.

நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் மகளிர் இலவச பேருந்து திட்டம் நடைமுறையில் உள்ளது. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குக்காக காலை சிற்றுண்டி திட்டம் நிறைவேற்றி உள்ளோம். தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. திமுக அரசு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். உறுதி அளித்த வாக்குறுதிகளை இந்தாண்டுக்குள் நிறைவேற்றி காட்டுவோம்’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal