அ.தி.மு.க.வினரை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அண்ணாமலை, தன் கட்சியினரை தி.மு.க.விடம் பறிகொடுத்து பரிதாபமாக இருப்பதுதான் பா.ஜ.க.வினரை பதற வைத்திருக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிட்டாலும் திமுக ஆட்சி பொறுப்பேற்று சந்திக்கும் முதல்வர் இடைத்தேர்தல் என்பதால் தன்னுடைய வெற்றியாகவே ஆளுங்கட்சி பார்க்கிறது. ஆகையால், வெற்றி பெற்றுத்தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறது. அதேநேரத்தில் ஆளுங்கட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை வாக்குகளாக பெற அதிமுக திட்டமிட்டுள்ளது. இதனால், திமுக, அதிமுக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் மாற்று கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளை தங்கள் கட்சிகளில் இணைக்க முக்கிய கட்சிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் (பட்டியலின அணி) என்.விநாயகமூர்த்தி தலைமையில் ஈரோடு மாவட்ட பா.ஜ.க. இளைஞர் அணிச் செயலாளர் வி.வெங்கடேஷ், மதுரைவீரன் மக்கள் இளைஞர் அணிச் செயலாளர் பழ.வீரக்குமார் ஆகியோர் பாஜகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்து அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

இந்த நிகழ்வில் பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த இணைப்பின் மூளையாக செயல்பட்டவர் செந்தில்பாலாஜி என்பதுதான் ஹைலைட்டே..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal