நடிகை மீனாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் நடக்க இருப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் தகவல் ஒன்று வெளியாகி காட்டுத்தீ போல் பரவி வந்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. கோலிவுட்டில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர், கடந்த 2009-ம் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு நைனிகா என்கிற பெண் குழந்தையும் உள்ளது.

திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட நடிகை மீனா, முக்கியமான வேடங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். மீனாவின் மகள் நைனிகாவும் விஜய்யின் தெறி படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். நடிகை மீனாவை திருமணம் செய்துகொண்ட பின் அவரை படங்களில் நடிக்க அனுமதித்து அவருக்கு பெரும் துணையாக இருந்த அவரது கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் மாதம் காலமானார்.

வித்யாசாகரின் மறைவால் மனமுடைந்து போன மீனா, வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். பின்னர் அவரது தோழிகளின் முயற்சியால் அதிலிருந்து படிப்படியாக மீண்டு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள அவர், மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். இந்த நிலையில் தான் அவரது இரண்டாவது திருமணம் பற்றிய தகவல் ஒன்று டோலிவுட் வட்டாரத்தில் காட்டுத் தீ போல் பரவி வந்தது.

அதன்படி நடிகை மீனாவுக்கு இரண்டாவது திருமணம் செய்துகொள்வதில் விருப்பம் இல்லையாம். ஆனால் அவரது பெற்றோர் தான் நைனிகாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேறு திருமணம் செய்துகொள்ளுமாறு அவரை வற்புறுத்தினார்களாம். இதையடுத்து தான் அவர் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாகவும், விரைவில் குடும்ப நண்பர் ஒருவரை அவர் மறுமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் பரவியது.

ஆனால் நடிகை மீனாவுக்கு நெருங்கிய வட்டாரத்தினர் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். நடிகை மீனாவுக்கு மறுமணம் செய்துகொள்ளும் எண்ணம் சுத்தமாக இல்லை என்றும், அவரது பெற்றொரும் அவரை 2-வது திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் மீனாவின் இரண்டாவது திருமணம் குறித்து பரவும் தகவல் வதந்தி என அவர்கள் கூறுகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal