தமிழகத்தில் பால்விலை உயர்வைக் கண்டித்து வருகிற 24&ந்தேதி தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்திருக்கிறார்!

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘‘தமிழக அரசு பால்விலையை உயர்த்தியதைக் கண்டித்தும், உயர்த்திய பால்விலையைத் திரும்ப பெற வலியுறுத்தியும் த.மா.கா சார்பில் சென்னையில் வரும் 24-ந்தேதி அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டம் 24-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் சென்னை, ராஜாஜி சாலை, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் த.மா.கா.வின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் சார்பில் நடைபெறுகிறது.

அதாவது தமிழக அரசு ஆரஞ்ச் நிற பாக்கெட் பால் விலையை உயர்த்தியது. இதனால் பொது மக்கள் குறிப்பாக சாதாரண நடுத்தர மக்களும், அவ்வப்போது ஆரஞ்ச் நிற பாக்கெட் பாலை வாங்க நேரிடும் ஏழை, எளிய மக்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே எனது தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட த.மா.கா தலைவர்களும், மாநில மாவட்ட நிர்வாகிகளும், துணை அமைப்பினரும் மற்றும் தொண்டர்களும் கலந்து கொண்டு தமிழக அரசை பால் விலையைக் குறைக்க வற்புறுத்துகிறோம்’’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal