அரசியல் சட்டமைப்புக்கு உட்பட்டு செயல்படாமல் அரசியல் கட்சி தலைவரைப் போல செயல்படும் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக ஆளுநராக செயல்படும் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. அரசு நிகழ்வுகளில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை ஆளுநர் வெளிப்படுத்துவதாக அமைச்சர்களே புகார் தெரிவித்திருந்தனர். இதே போல திருக்குறளில் ஆன்மிக கருத்துகள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து நாடுகளும் ஏதோ ஒரு மதத்தை பின்பற்றுவதாவும் தெரிவித்திருந்தார். இது போன்ற கருத்துகள் திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளை அதிருப்தி அடையவைத்து.

இந்தநிலையில் திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் சார்பாக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ராணிப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது.

‘‘தமிழ்நாட்டில் ஆளுநராக பொறுப்பேற்று செயல்பட்டு வரும் ஆர்.என் ரவி, தனதுபொறுப்பில் இருந்து செயல்படாமல் அரசியல் கட்சி தலைவரைப் போல பகிரங்கமாக செயல்பட்டு போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார்.மதச் சார்பின்மைக்கு நேர்மாறாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மக்கள் நலனுக்காக தான் நிறைவேற்றப்படுகிறது. அவ்வாறு நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் உள்ளது. அந்த மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

எனவே ஆளுநரின் செயல்பாட்டை கண்டிக்கும் வகையில் டிசம்பர் 29 ஆம் தேதி சென்னையில் ராஜ்பவனை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்’’ என்றார்.

மேலும், ‘‘ இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா தலைமை ஏற்க இருக்கிறார்’’ என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal