திருச்சி மாவட்டம் துறையூர், முசிறி உட்பட 3 இடங்களில் மேக்னா டெக்ஸூக்கு சொந்தமான ஜவுளி நிறுவனங்கள் மற்றும் இவர்களுக்கு சொந்தமான கிளைகள், வீடு, அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் குமார் (52).இவர் மேக்னா டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் துறையூர், முசிறி, பரமத்தி வேலூர் ஆகிய இடங்களில் ஜவுளி கடைகள் நடத்தி வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகையின்போது ஜவுளி விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு போலி பில் கொடுத்து வருமான வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் கோவை வருமான வரித்துறை உதவி இயக்குநர் பாலாஜி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் புதன்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகம் ஆகிய இடங்களில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை முடிவில் நிறுவனத்தில் எந்த அளவிற்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளது என தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சோதனை இரவு வரை நீடித்து வருகிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal