அரசின் மாண்பு, மதிப்பு அனைத்துமே நீதிமன்ற உத்தரவால் காற்றில் பறக்க கூடிய நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின் என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், செந்தில் பாலாஜி மீதான புகார்களை மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக பாஜக மாநிலத்துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது செந்தில் பாலாஜி மோசடி செய்து விட்டார் என்று குற்றம் சாட்டிய இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மீண்டும் அமைச்சராக்கப்பட்ட செந்தில் பாலாஜியை, அந்த குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் உள்ளது என்றும், மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இனியும் செந்தில்பாலாஜி தமிழக அமைச்சராக நீடிப்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இழுக்கே. இந்த அரசின் மாண்பு, மதிப்பு அனைத்துமே நீதிமன்ற உத்தரவால் காற்றில் பறக்க கூடிய நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal