தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது காவல் ஆய்வாளராக இருந்த திருமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திருமலை தற்போது நெல்லை மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையாளராக பணியாற்றி வருகிறார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 2018ம் ஆண்டு 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தின் 100வது நாளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பிரம்மாண்ட பேரணியை பொதுமக்கள் நடத்தினர். ஆட்சியர் அலுவலகத்தை அடைந்த போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி போராட்டக்கார்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, வன்முறை குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அப்போதைய அதிமுக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.

இதனையடுத்து, விசாரணை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. ஸ்டெர்லைட் கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகள் தவறிவிட்டனர். போராட்டக்காரர்களில் சிலர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கு முன் எவ்வித எச்சரிக்கையும் விடப்படவில்லை. அப்போதைய காவல்துறைத் தலைவர் சைலேஷ்குமார் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள்ளேயே இருந்திருந்தும், அப்போதைய காவல்துறை துணைத் தலைவர் அவராகவே அதிகாரத்தைக் கையிலெடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

இதில் உச்சபட்சமாக பொதுமக்கள் மீது சூப்பாக்கிச்சூடு நடத்திய காவலர் சுடலைக்கண்ணு பற்றியும் அதில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ், டிஐஜி கபில்குமார் சரத்கர், டிஎஸ்பி லிங்க திருமாறன் ஆகியோரின் உத்தரவின் பேரில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது என தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் ஐஜி சைலேஷ் யாதவ், டிஐஜி கபில்குமார் சரத்கர், எஸ்பி மகேந்திரன், டிஎஸ்பி லிங்க திருமாறன், காவல் ஆய்வாளர்கள் திருமலை, ஹரிகரன், பார்த்திபன், எஸ்ஐக்கள் சொர்ணமணி, ரென்னீஸ், காவலர்கள் ராஜா சங்கர், சுடலை கண்ணு, தாண்டவ மூர்த்தி, சதீஷ்குமார், ராஜா, கண்ணன், மதிவாணன் என பல பேர் மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, சுடலைகண்ணு, சங்கர், சதீஷ் ஆகிய காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது காவல் ஆய்வாளராக இருந்த திருமலை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal