சென்னை ராமாவரம் தோட்டத்தில் சசிகலா காரை எம்.ஜி.ஆர். பேரன் சிறைப்பிடித்து வைத்தார். அவரிடம் பன்னீர்செல்வம் ஆதரவாளர் பஞ்சாயத்து நடத்திய பின் அந்த கார் விடுவிக்கப்பட்ட சம்பவம் சசிகலாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அ.தி.மு.க.வின் 51வது ஆண்டு விழாவை ஒட்டி சென்னை ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு தன் ஆதரவாளர்களுடன் சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் சசிகலா ஏற்பாட்டில் 2000 பேருக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

அப்போது எம்.ஜி.ஆர். பேரன் ராமச்சந்திரன் தனக்கு 10 பிரியாணி பொட்டலங்கள் தருமாறு கேட்டுள்ளார். பிரியாணி கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக அவருக்கும் சசிகலா தரப்பினருக்கும் இடையே மோதல் உருவானது. பின் இரு தரப்பினரையும் சிலர் சமரசப்படுத்தினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் வாய் பேச முடியாதோர் பள்ளியில் படிக்கும் 250 குழந்தைகளுக்கு தீபாவளி இனிப்பும் பட்டாசும் வழங்கி வரும்படி சசிகலா தன் கார் டிரைவரையும் பாதுகாவலரையும் அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் இருவரும் சசிகலா காரில் ராமாவரம் தோட்டத்திற்கு வந்து பள்ளி குழந்தைகளிடம் இனிப்பும் பட்டாசும் வழங்கி விட்டு காரை எடுக்க முயன்றனர்.

அப்போது அங்கு வந்த எம்.ஜி.ஆரின் பேரன் கார் சாவியை பறித்து கொண்டு ‘யாரிடம் கேட்டு நீங்கள் உள்ளே வந்தீர்கள்?’ என கேட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதும் கார் டிரைவர் சரமாரியாக தாக்கப்பட்டார்.

பின் இரவு 10:00 மணி வரை சசிகலாவின் கார் சிறைப்பிடித்து வைக்கப்பட்டது. இந்த தகவல் பெங்களூர் புகழேந்திக்கு தெரியவந்ததும் அவர் எம்.ஜி.ஆர். பேரனிடம் பஞ்சாயத்து நடத்தினார். அதன் பின் சசிகலாவின் கார் செல்ல அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal