தமிழக அரசு சொத்துவரி… வீட்டு வரி… குடிநீர் வரி… என ஒவ்வொன்றாக உயர்த்தி வருகிறது. அடுத்து ‘சரக்கு’ விலையையும் உயர்த்த முடிவு செய்திருக்கிறது. இந்த விலை உயர்வால் ‘குடிமகன்’கள் மூலம் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்படவுள்ளது. எனவே இனியாவது குடிமகன்கள் விழித்துக்கொள்வார்களா..?

தமிழ்நாட்டில் மது விற்பனையை தமிழக அரசே டாஸ்மாக் மூலம் முழுமையாக நடத்தி வருகிறது. டாஸ்டாக் மதுக்கடைகளுக்கு பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து மதுபாட்டில்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. தற்போது தமிழ்நாட்டில் 11 இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான உற்பத்தி நிறுவனங்கள் 7 பீர் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் 1 ஒயின் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது.

அதாவது 15 வடிப்பாலைகள் தனியார் துறையில் உள்ளன. 2 வடிப்பாலைகள் கூட்டு துறையிலும் உள்ளன. இந்த ஆலைகள் மது உற்பத்தி செய்வதற்கு பயன்படும் மூலப்பொருளான சாராவியை உற்பத்தி செய்கின்றன. இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான உற்பத்தி நிறுவனங்களில் உயர்தர மதுபான வகைகளை தயாரிப்பதற்கு தானியங்களை அடிப்படையாக கொண்ட சாராவி பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் தானியங்களை அடிப்படையாக கொண்ட சாராவி உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பதால் பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது. 2021-&2022-ம் ஆண்டில் 8.26 கோடி லிட்டர் தானியங்களை அடிப்படையாக கொண்ட சாராவி வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளின் கீழ் உரிய சிறப்பு கட்டணம் வசூலிக்கப்பட்ட பின்னர், பிற நாடுகளில் இருந்து அயல்நாட்டு மதுபான வகைகளை இறக்குமதி செய்வதற்கு மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரால் அனுமதி ஆணைகள் வழங்கப்படுகிறது. துணை ஆட்சியர் நிலையில் உள்ள அதிகாரிகள் மதுவிலக்கு சட்டத்தின் கீழ் சாராவி மற்றும் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானம்-பீர்-ஒயின் உற்பத்தியை கட்டுப்படுத்தவும், அவற்றை தவறான நோக்கத்திற்கு பயன்படுத்துவதை தடுக்கவும் ஆயத்தீர்வை விதிக்கப்பட வேண்டிய பொருட்களுக்கு ஆயத்தீர்வை விதிப்பதை கண்காணிக்கவும், இவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

தொழிற்சாலைகளில் இருந்து டாஸ்மாக் நிறுவனத்துக்கு பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டு ஒவ்வொரு கடைகளுக்கும் மதுபாட்டில்கள் விற்பனைக்கு வருகிறது. இந்த மதுபாட்டில்கள் விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ஆயத்தீர்வை வருவாய் மற்றும் விற்பனை வரி மூலம் வருமானம் கிடைத்து வருகிறது. 2003-04-ம் ஆண்டில் ரூ.3,639.33 கோடியும், 2004-2005-ல் ரூ.4,872.03 கோடியும், 2005-06-ம் ஆண்டில் ரூ.6,030.77 கோடியும், 2006-07-ம் ஆண்டில் ரூ.7,473.61 கோடியும், 2007-08-ம் ஆண்டில் ரூ.8,821.16 கோடியும், 2008-09-ம் ஆண்டில் ரூ.10,601.50 கோடியும் அரசுக்கு வருவாய் கிடைத்தது. இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் வருவாய் ரூ.2 ஆயிரம் கோடி அதிகரித்தது. கடந்த 2019-20-ம் ஆண்டில் ரூ.33,133.24 கோடியும், 2020-21-ம் ஆண்டில் ரூ.33,811.15 கோடியும், 2021-22-ம் ஆண்டில் ரூ.36,013.14 கோடியாகவும் அரசுக்கு வருவாய் கிடைத்தது. இந்த வரி வருவாயை மேலும் அதிகரிக்கும் வகையில் 1937-ம் ஆண்டு மது விலக்கு சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில் மதுவிலக்கு திருத்த அவசர சட்டம் நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கொண்டு வந்த இந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டு இருப்பதாவது:- தற்போது 1937-ம் ஆண்டு தமிழ்நாடு மது விலக்கு சட்டத்தின் பிரிவின் கீழ் பிற மாநிலங்களில் இருந்தும் மற்றும் இந்தியாவின் சுங்க எல்லையைக் கடந்தும் தமிழ்நாடு மாநிலத்திற்குள் கொண்டு வரப்படும் ஆயத்தீர்வை விதிக்கத்தக்க அனைத்து பொருட்கள் அதாவது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபானங்கள், ஒயின் மற்றும் பீர் ஆகியவற்றின் மீது புருப் லிட்டர் ஒன்றுக்கு ரூ.450 ரூபாய்க்கு மிகாத அளவில், அரசால் அவ்வப்போது அறிவிக்கையின் வாயிலாக குறித்துரைக்கக் கூடியவாறான விதத்தில் சிறப்புக் கட்டணம் விதிக்கப்படுகிறது.

சிறப்பு கட்டணத்தின் அதிகபட்ச வீதமானது, அரசினால் 2014-ம் ஆண்டில் அறிவிக்கை செய்யப்பட்டது. அதன் பின்பு சிறப்பு கட்டணம் உயர்த்தப்படவில்லை. மாநிலத்தின் வருவாயைப் பெருக்கும் வகையில், ஆயத்தீர்வை விதிக்கத்தக்க அத்தகைய அனைத்து பொருட்களின் மீதும் விதிக்கக்கூடிய சிறப்பு கட்டணத்தின் அதிகபட்ச வீதமானது புரூப் லிட்டர் ஒன்றுக்கு ரூ.450-லிருந்து 1000 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

அதற்கிணங்க, 2022-ம் ஆண்டு தமிழ்நாடு மது விலக்கு அவசர சட்டமானது 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந்தேதி அன்று கவர்னரால் பிரகடனம் செய்யப்பட்டு அது 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந்தேதியிட்ட தமிழக அரசிதழின் சிறப்பிதழில் வெளியிடப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் (ஐ.எம்.எப்.எல்.) ஒயின் மற்றும் பீர் போன்ற அனைத்து கலால் பொருட்களுக்கும் விதிக்கப்படும் சிறப்பு கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட மசோதா சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டு உள்ளதால் கடைகளில் மதுபானங்கள் விலை மேலும் உயரும் என தெரிகிறது.

முதலில் வெளிநாட்டு மதுவகைகள் விலை உயர்த்தப்படும். அதன்பிறகு மற்ற மதுபானங்கள் விலை உயரும் என தெரிகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal