நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. உள்பட 200க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ் அணியில் இணைந்து முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்து தனித்தனியாக அணியாக செயல்பட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் பயணம் செய்து பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார். அதேபோல், மற்றொரு புறம் ஓபிஎஸ் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகளை நியமித்து அதிரடி காட்டி வருகிறார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு ஓபிஎஸ் அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். முதலில் தங்கமணிக்கு எதிராக 3 மாவட்ட செயலாளர்களை நியமித்து அதிர்ச்சி கொடுத்த நிலையில் தற்போது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ, சிட்டிங் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ் அணியில் இணைந்து பேரதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதியில் 1996-&2001, 2016&-2021 வரையில் சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்தவர் சி.சந்திரசேகரன். கொல்லிமலை ஒன்றியக் குழு பெருந்தலைவராக &பதவி வகித்துள்ளார். கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக எந்தக் கட்சியிலும் இணையாத நிலையில், தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகள் உருவாகியுள்ளதை அடுத்து, சென்னையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று அவரது அணியில் சந்திரசேகரன் இணைந்துள்ளார். அவருடன் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சிவப்பிரகாசம், கொல்லிமலை ஒன்றியக் குழு தலைவரர் மாதேஸ்வரி, துணைத் தலைவர் கொங்கம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தனுஷ்கோடி, லட்சுமி, பாலுசாமி, பாப்பாத்தி மற்றும் நான்கு ஊராட்சிமன்ற தலைவர்கள், லேம்ப் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட 200 பேர் ஓபிஎஸ் அணியில் இணைந்து இபிஎஸ், தங்கமணிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இந்நிகழ்வின்போது முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal