அரசு போக்குவரத்துப் பணியாளர்களுக்கு 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘‘தமிழக அரசு, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலம் தாழ்த்தாமல் போனசை வழங்க முன்வர வேண்டும்.

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களான மின்சார வாரியம், குடிநீர் வாரியம், சிவில் சப்ளை கழகம், வீட்டு வசதி வாரியம், ரப்பர் மற்றும் தோட்ட வாரியம், சர்க்கரை கழகங்கள், சிறு தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைவருக்கும் நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 25 சதவிகித அளவில் போனஸ் மற்றும் கருணை தொகையாக அளித்திடும் வகையில் தமிழக அரசு அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்.

குறிப்பாக அரசு விடுப்பு மற்றும் பண்டிகைக் காலங்களில் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால், விடுப்பு எடுக்க முடியாமல் பணிபுரிவது பாராட்டுக்குரியது. அது மட்டுமல்ல அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் அவர்களின் குடும்ப செலவுக்கே போதுமானதாக இல்லை. இருப்பினும் பொருளாதார சிரமத்தைப் தாங்கிக்கொண்டு தங்களுக்கான பணியை தொடர்ந்து மேற்கொள்கிறார்கள். அவர்களின் மக்கள் பணி சிறப்புக்குரியது.

கொரோனா காலத்தில் பணியாற்றியபோதும், குறைவான போனஸ் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் பணியாளர்களின் குடும்பங்கள் தீபாவளி பண்டிகை வருவதால் அரசின் சார்பில் வழங்கப்படும் போனஸை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். எனவே தமிழக அரசு, வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கும் போனசை 25 சதவிகித அளவில் முன் கூட்டியே வழங்கி தொழிலாளர்களின் நலன் காக்க வேண்டும்.’’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal