கொலை, கொள்ளை வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 15 பேர், முக்கிய ரவுடிகள் 13 பேரும் சிக்கியுள்ளனர்.
தமிழகத்தில் நடந்த ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 133 முக்கிய ரவுடிகள் பிடிபட்டுள்ளனர். இந்த 133 பேரில் கொலை, கொள்ளை வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 15 பேர், முக்கிய ரவுடிகள் 13 பேரும் சிக்கியுள்ளனர்.
இந்த 13 ரவுடிகள் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர்கள் ஆவர். இதுகுறித்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடந்த 24 மணி நேரத்தில் “மின்னல் ரவுடி வேட்டை” தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இதில் 133 முக்கிய ரவுடிகள் பிடிபட்டனர். கொலை, கொள்ளை வழக்குகளில் நிலுவையில் இருந்த 15 பேர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ஏபிளஸ் 13 ரவுடிகளும் சிக்கினர். இவர்கள் மீது பல கொலை, கொள்ளை, நில அபகரிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிடிபட்ட மற்ற 105 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. “மின்னல் ரவுடி வேட்டை” தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.