தி.மு.க.வின் தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில், இன்றைய தினம் அண்ணா அறிவாலயம் களைகட்டியிருந்தது.

அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்கட்சி தேர்தலை நடத்தி அதன் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது தேர்தல் விதிகளில் ஒன்றாகும். அதன்படி தி.மு.க.வின் 15-வது உள்கட்சி பொதுத் தேர்தல் நடந்து வருகிறது. தேர்தலில் கிளை கழகம், பேரூர், ஒன்றியம், நகரம், வட்டம், பகுதி மாநகரம் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுவிட்டது.

இதன் அடுத்தகட்டமாக தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுக்க வருகிற 9-ந் தேதி சென்னையில் பொதுக்குழு கூடுகிறது. இந்த பொதுக்குழு கூட்டம் 9-ந் தேதி காலை 9 மணிக்கு கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியின் லிங்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது.

இந்த பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று பெறப்பட்டது. இதில் தற்போது தி.மு.க. தலைவராக உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெற்றுக் கொண்டார். அப்போது தலைமை நிலைய செய லாளர்கள் பூச்சிமுருகன், துறைமுகம் காஜா, மற்றும் ஜெயக்குமார் பத்மநாபன் உடன் இருந்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்தினார். அவரது மனுவை 5 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிந்திருந்தனர். பொதுக்குழு உறுப்பினர்கள் 5 பேர் வழி மொழிந்திருந்தனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தபோது பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா, மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு ஆகியோர் உடன் வந்திருந்தனர். மனு தாக்கலின்போது அங்கு திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள் தளபதி வாழ்க என்று முழக்கமிட்டனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனுதாக்கலுக்கு முன்பு மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதி, அண்ணா நினைவிடங்களுக்கு சென்று வணங்கி மரியாதை செலுத்திவிட்டு அறிவாலயம் வந்திருந்தார்.

தி.மு.க. தலைவர் பதவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனு தாக்கல் செய்திருந்தாலும், அவரது பெயரில் ஒவ்வொரு மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளர்களும் மனு செய்தனர். திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் மொத்தம் 32 விருப்ப மனுக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில் வழங்கினார். சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் மொத்தம் 8 விருப்ப மனுக்கள் மு.க.ஸ்டாலின் பெயரில் கொடுக்கப்பட்டது.

காஞ்சி வடக்கு மாவட்டம் சார்பில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழிகாட்டுதல் படி மாவட்ட துணைச் செயலாளர் இ.கருணாநிதி எம்.எல்.ஏ. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில் விருப்ப மனு கொடுத்தார். அவருடன் தலைமை செயற்குழு உறுப்பினர் மீ.அ.வைத்தியலிங்கம், து.மூர்த்தி, காமராஜ் மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அ.தமிழ் மாறன், ரஞ்சன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர். இதேபோல் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக போட்டி போட்டு மனு கொடுத்து பணம் கட்டினார்கள்.

இதனால் அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் களைகட்டி இருந்தது. அண்ணா அறிவாலயத் தில் இன்று தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal