தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று மாற்றியத்திருப்பது வேதனை அளிக்கிறது என்று ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘‘ தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகங்களில் பணியாற்றிவரும் தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த நிறைவேற்றம் எதிர்பார்ப்பிற்கு நேர் மாறாகவும், மிகுந்த ஏமாற்றத்தையும் அளித்திருக்கின்றது.

2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு வயது முதிர்வு, விருப்ப ஓய்வு பெற்றுள்ளோர்களுக்கும், காலமான தொழிலாளர் குடும்பத்தினருக்கும், வழங்கப்பட வேண்டியுள்ள பணப்பலன்கள் வழங்குவது குறித்து நிதி ஒதுக்கீடோ, வழங்குவதற்கான அறிவிப்பும் இல்லாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. ஊதிய ஒப்பந்த கால அளவு 3 ஆண்டுகளாக இருந்து வந்ததை, தற்பொழுது 4 ஆண்டுகளாக மாற்றியமைத்துள்ளது.

இதை அனைத்து தொழிற்சங்கங்களுமே ஏற்றுக் கொள்ளாத நிலையில், அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து உள்ளது. இவற்றை உரிய முறையில் ஆலோசனை செய்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal