ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமி வழங்கியதால், ஓ.பி.எஸ். பக்கம் திசைமாறும் முடிவை செல்லூர் ராஜூ எடுத்திருப்பதாக தகவல்கள் கசிகின்றன!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவில் பாப்பாகுடி சிக்கந்தர் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி கூடுதல் கட்டிடங்களை திறந்து வைத்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ‘‘ என்னை பொறுத்தவரை இந்த கட்சியில் இருந்து ஒரு தொண்டனும் வெளியே செல்லக்கூடாது புரட்சித்தலைவி ஜெயலலிதாவை காளிமுத்து பேசாத பேச்சா?

அது போல பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, கண்ணப்பன், ஆர் எம் வீரப்பன் போன்றவர்களும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஆனால் புரட்சித்தலைவி அம்மா அவர்களையும் ஏற்றுக்கொண்டு கழகத்தில் பதவிகளை வழங்கினார். அதுபோல தற்போது அதிமுகவை விட்டு விலகி இருக்கும் ஓ பன்னீர்செல்வம் போன்றவர்கள் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொண்டால் மீண்டும் அதிமுகவில் இணைந்து பணியாற்றுவது குறித்து பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுப்பார்.

கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் ஏற்படுத்தக்கூடிய உடன்பாடாகும் அதிமுக கூட்டணியை பொறுத்த வரை அந்தக் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் கேட்கும் தொகுதி எண்ணிக்கையை பொருத்து அந்த நேரத்தில் முடிவு செய்யப்பட்டு எங்கள் கூட்டணியில் எந்த கட்சிகள் இடம் பெறும் என்பது முடிவு செய்யப்படும்.

வருகிற 25-ம் தேதி மின் கட்டண உயர்வை கண்டித்து மதுரையில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினருடன் சேர்ந்து பொதுமக்களும் திரளாக பங்கேற்று இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டும்’’ இவ்வாறு அவர் கூறினார்.

ஓ.பி.எஸ். மீண்டும் அ.தி.மு.க.விற்கு வந்தால் ஏற்போம் என்று செல்லூர் ராஜூ பேசியது தொடர்பாக அவருக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். ‘‘சார், செல்லூர் ராஜூ எப்போதுமே ஒரு நிலைப்பாட்டில் இருக்கமாட்டார். தற்போது ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி வழங்கியதிலிருந்தே, ஓ.பி.எஸ்.ஸிற்கு சாதகமாக பேசி வருகிறார்.

இன்னும் கொஞ்ச நாளில் சசிகலாவையும் அ.தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என்று செல்லூரார் சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எல்லாம் பதவி படுத்தும் பாடு’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal