‘‘அ.தி.மு.க., பொதுக்குழுவில் 23 தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறாததால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது. பன்னீர்செல்வம் இனிமேல் பொருளாளர் மட்டும் தான். பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் மட்டுமே!’’ என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

சென்னையில் எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், ‘‘வைத்திலிங்கம் தேவையற்ற கருத்துகளை, தலைமை கழக கூட்டத்தில் ரவுடித்தனமான முறையில் பேசி உள்ளார். கட்சி விதி 19ன் படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டலாம். இல்லை என்றால், பொதுக்குழு உறுப்பினர்களில் 5 ல் ஒரு பங்கு உறுப்பினர் கையெழுத்திட்டு கொடுத்தால், அதனை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரிடம் தான் கொடுக்க வேண்டும் என்று இல்லை. அதனை யாரிடமும் கொடுக்கலாம் அப்படி கொடுத்தால், 30 நாட்களில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முறைப்படி பொதுக்குழு நடத்தப்பட்டது. சட்ட விதிமீறலும் இல்லை.

அவைத்தலைவரை இதற்குமுன்பு எம்ஜிஆர், ஜெயலலிதா தான் நியமனம் செய்து அறிவிப்பார் என வைத்திலிங்கம் கூறினார். ஆனால், கட்சி சட்டம் அப்படியில்லை. ஜெயலலிதா என்ன கூறுகிறாரோ அதை ஏற்று கொண்டோம். ஜெயலலிதா கூறியது சட்டம். அதுவே வேதவாக்கு. அப்படியே ஏற்று கொண்டோம். அவர் சட்டப்படி செயல்பட்டார். முதலில் அவர் அறிவிப்பார். பிறகு பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறுவார். ஆனால், வைத்திலிங்கம் திட்டமிட்டு சொல்கிறார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் நியமனம் செய்வார் என்கிறார். விதியில் அப்படி கூறப்படவில்லை.

பழனிசாமி, பன்னீர்செல்வம் கையெழுத்திட்டு தமிழ் மகன் உசேன் தற்காலிக அவை தலைவராக இருப்பார் என அறிவித்தோம். உட்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டு விட்டது. அவைத்தலைவர் தேர்தல் நடத்தப்படவில்லை. தமிழ் மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டது தீர்மானம் கிடையாது. இந்த பதவிக்கு பொதுக்குழு கூடிதான் நியமனம் செய்யப்பட்டது என்பது விதி. இதில் எங்கு தவறு உள்ளது. நீதிமன்ற அவமதிப்பு உள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுங்கள் பார்த்து கொள்வோம். தேர்தல் பற்றி நீதிமன்றம் கூறவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி செயல்பட்டுள்ளோம்.

கட்சியை உடைத்த, இரட்டை இலை சின்னத்தை முடக்கிய பன்னீர்செல்வத்திற்காக பொது மன்னிப்பு வழங்கி பதவி வழங்குவதற்காக பொதுக்குழுவை திருத்த அதிகாரம் இல்லாத போது, கட்சி சட்டத்தில் திருத்தம் செய்ததை ஏற்று கொண்டார்கள். டிசம்பர் 2021 ல் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடந்தது. தேர்தல் அதன் முடிவுக்கு பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறவில்லை. நேற்றோடு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு காலாவாதியாகிவிட்டது. இனி பன்னீர்செல்வம் பொருளாளர் மட்டுமே. பழனிசாமி தலைமை கழக செயலாளர் மட்டுமே. இதுதான் இன்றைய நிலை.

இனிமேல், பொறுப்பாளர்கள் மட்டுமே கட்சியை வழிநடத்துவார்கள். ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டாலோ, நீக்கப்பட்டாலோ, கட்சி விதி 20, பிரிவு அ-வின் படி, புதியவர் வரும்வரை பொறுப்பாளர்கள் கட்சியை வழிநடத்துவர். பொதுக்குழுவின் முடிவுகளில் யாரும் கேள்வி கேட்க முடியாது. அதிமுக பொதுக்குழுவில் 2,550 உறுப்பினர்கள் பழனிசாமிக்கு ஆதரவு. பன்னீர்செல்வம் உடன் இருக்கும் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் எந்த கட்சிக்கு செல்வார்கள் என்று யாருக்கும் தெரியாது.

அதிமுகவில் நடப்பது உட்கட்சி விவகாரம். இதில் திமுகவினரோ, முதல்வர் ஸ்டாலினோ தலையிட வேண்டிய அவசியமில்லை. அதில் கேள்வி கேட்க முடியாது. ஸ்டாலினின் மகனுக்கு பட்டாபிஷேகம் நடக்கும்போது திமுகவில் என்ன நடக்கும் என்பதை நாங்களும் பார்க்கத்தான் போகிறோம். அதனால் எங்கள் கட்சி பிரச்னை குறித்து ரொம்ப சந்தோஷப்பட வேண்டாம்’’இவ்வாறு சண்முகம் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal