‘அ.தி.மு.க. பொதுக்குழு திட்டவட்டமாக நடக்கும்’ என எடப்பாடியார் தரப்பு தெரிவித்திருந்த நிலையில், புதிதாக ஓ.பி.எஸ். அளித்துள்ள புகார் மனுவால், பொதுக்குழு கூட்டம் நடக்குமா என அ.தி.மு.க தொண்டர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கின்றனர்!

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதிக்கக்கூடாது என ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., கையெழுத்திட்ட மனு அளிக்கப்பட்டது. நாளை மறுநாள்(ஜூன்.,23) அ.தி.மு.க., செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், ஒற்றை தலைமை விவகாரத்தில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என்ற ஓ.பி.எஸ்., கோரிக்கையை ஏற்க இ.பி.எஸ்., தரப்பினர் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், ஓ.பி.எஸ்., கையெழுத்திட்டு வழங்கப்பட்ட மனுவில் கூறியுள்ளதாவது, ‘‘அ.தி.மு.க., பொதுக்குழுவிற்கு போலீசார் அனுமதி தரக்கூடாது. இரு தரப்பினருக்கும் முரண்பாடு உள்ளதால், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு. கட்சியின் சட்ட விதிகளுக்கு மாறாக பெஞ்சமின் அனுமதி கேட்டுள்ளார். பொதுக்குழுவை ஒத்திவைக்க கோரி இ.பி.எஸ்.,க்கு எழுதிய கடிதத்தில் இதுபற்றி விரிவாக தெரிவிக்கப்பட்டுவிட்டது.

தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையிலும், கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் நலன் கருதி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை போலீசாருக்கு உள்ளதாலும், பெஞ்சமின் பாதுகாப்பு கேட்டிருப்பது தன்னிச்சையான முடிவு என்பதாலும், கட்சிக்கு எதிரான நடவடிக்கையாக இருப்பதாலும் கூட்டத்திற்கான அனுமதியை மறுக்க வேண்டும்’’ இவ்வாறு அந்த மனுவில் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதனிடையே, அ.தி.மு.க., பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறி, சூரியமூர்த்தி என்பவர் தொடர்ந்த மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழு நடத்துவதை எப்படியாவது தற்போதைக்கு தள்ளிவைத்தாலே ஓ.பி.எஸ்.ஸுக்கு கிடைத்த வெற்றியாகிவிடும். இதற்காகத்தான் ஓ.பி.எஸ். போராடி வருகிறார். தற்போது பொதுக்குழு கூட்டம் நடப்பது தமிழக காவல்துறையின் கையில் இருப்பதால், அடுத்த என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் அதிகரித்து வருகிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal