மகளின் பிறந்தநாளில் கோழிக்கறி வைக்காததால் கோபமடைந்த கணவர் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தாவணகரே மாவட்டம் ஹரிஹர பகுதியில் உள்ள பன்னிக்கோடு கிராமத்தை சேர்ந்தவர்கள் கெஞ்சப்பா ஷீலா தம்பதி. கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் ஓட்டுநரான கெஞ்சப்பாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதும், குழந்தை இல்லாத காரணத்தால் அதனை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதும் ஷீலாவுக்கு தெரியவந்தது. இதனையடுத்து ஷீலாவின் மீது சந்தேகம் கொண்ட கெஞ்சப்பா குடித்துவிட்டு அவரை அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.

ஒரு கட்டத்தில் கெஞ்சப்பாவின் அட்டகாசம் தாங்காமல், வீட்டில் இருந்து வெளியேறி ஷீலா புட்டின்டி பகுதியில் வசித்து வந்துள்ளார் இந்த நிலையில் கடந்த புதன் கிழமை தனது மகளுக்கு பிறந்தநாள் என்பதால் ஷீலா மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது கெஞ்சப்பா ஷீலாவை கோழிக்குழம்பு வைக்கச் சொல்லியிருக்கிறார். ஆனால் ஷீலா குழம்பு வைக்கவில்லை என்று தெரிகிறது. ஏற்கனவே குடி போதையில் இருந்த கெஞ்சப்பா இதைக்கேட்டு கடுமையாக கோபமடைந்த நிலையில், ஷீலாவை கத்தியால் சரமாரியாக 10 இடங்களில் குத்தி கொலை செய்துள்ளார். இதனையடுத்து நேரடியாக காவல்நிலையத்துக்கு சென்ற கெஞ்சப்பா நடந்தவற்றை கூறி சரண் அடைந்துள்ளார். தற்போது குழந்தையை கெஞ்சப்பாவின் முன்னாள் மனைவி கவனித்து வருவதாக சொல்லப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal