‘வீட்டு வரி விண்ணைத் தொட்டு விட்டது. அடுத்து கரண்ட் பில் மற்றும் பால் விலை, பஸ் கட்டணத்தையும் உயர்த்தப் போகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்!

சேலம் ஐந்து ரோடு பகுதியில் இலவச தையல் பயிற்சி பள்ளி துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ‘‘திமுக தனது தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த சாத்தியக்கூறுகள் இல்லை என 16 லட்சம் அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் ஏமாற்றி உள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்கு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்திற்கும் சாலைகள் அவசியம் எனவும், எட்டு வழி சாலை திட்டத்தை அதிமுக அரசு ஆட்சியில் இருக்கும்போது திட்டத்தை செயல்படுத்த முயற்சித்தது. ஆனால் அன்றைய எதிர்க்கட்சியாக இருந்த திமுக அரசு எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிராக பல கட்ட போராட்டங்களை நடத்தியது. ஆனால் தற்போது எட்டு வழி சாலை திட்டம் நல்ல திட்டம் என திட்டத்தை ஆதரித்துள்ளனர்.

திமுக கூட்டணி கட்சிகளும் தற்போது எட்டு வழி சாலை திட்டம் சம்பந்தமாக எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் மௌனமாக உள்ளனர். அரசின் திட்டங்களை செயல்படுத்த திமுக அரசிற்கு நல்ல திட்டங்கள் எவையும் இல்லை. ஓராண்டு கால ஆட்சியில் மக்கள் வாழ்வாதாரம் வாழ முடியாத அளவில்தான் உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டிற்குள் வீட்டு வரி 100 மடங்கு உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் இனி வரி கட்ட வேண்டும் என்ற திமுக அரசின் செயல்பாடு மக்களை மேலும் அழிவு பாதைக்கு கொண்டு செல்லும். எதையும் சரிப்படுத்தாத ஒரு அரசாக திமுக அரசு ஓராண்டு ஆட்சி செய்து வருகிறது.

அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் நூறு மடங்கு உயர்ந்துள்ளது. முக்கியமாக கட்டுமான தொழிலை நம்பி இருந்த பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் கட்டுமான பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

நிதிப்பற்றாக்குறை வரும்போது, அரசு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர், நிச்சயமாக அதனை உயர்த்துவார்கள். ஏற்கெனவே அரசுப் போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளனர். எனவே விரைவில் பஸ் கட்டணம் உயரும், மின் கட்டணமும் உயர்த்தப்படும். காரணம் அதுவும் பெரும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதோடு பால் விலையையும் உயர்த்தப்போகின்றனர்’’ என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal