கணவன் கண்ணெதிரிலேயே ரெயில் நிலையத்தில் கர்ப்பிணி பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மகளிரணியினர் மற்றும் தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆந்திரா மாநிலம் விஜயவாடா அருகே உள்ள நாகாய லங்கா பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். தற்போது அவர் 4 மாத கர்ப்பமாக உள்ளார். இவர் தனது கணவர் மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் பாபட்லா மாவட்டம் ரேப்பள்ளியில் கூலி வேலை செய்வதற்காக வந்து இருந்தார். வேலை முடிந்து சொந்த ஊருக்குச் செல்ல ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.

ரேப்பள்ளி ரெயில்நிலையத்தில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் அவர் தூங்கி கொண்டு இருந்தார். ரெயில் நிலையம் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி இருந்தது. நள்ளிரவு 1 மணியளவில் மது போதையில் வந்த 3 பேர் இளம்பெண்ணின் கணவரை எழுப்பி தற்போது நேரம் என்ன என்று கேட்டனர். அதற்கு அவர் தன்னிடம் வாட்ச் இல்லை என கூறினார்.

அப்போது 3 பேரும் சேர்ந்து இளம்பெண்ணின் கணவரை சரமாரியாக தாக்கி கழுத்தை நெரித்தனர். அவர் வலியால் அலறி துடித்தார். அலறல் சத்தம் கேட்டு எழுந்த இளம்பெண் வாலிபர்களிடம் இருந்து தனது கணவரை மீட்க முயற்சி செய்தார். அப்போது அவர்கள் 3 பேரின் பார்வையும் இளம்பெண் மீது விழுந்தது. அவர்கள் கர்ப்பிணி என்றும் பாராமல் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றனர். இதனை கணவர் தடுக்க முயன்றார். அவர்கள் அவரை தாக்கி விட்டு கர்ப்பிணியை பிளாட்பாரத்தின் ஒதுக்குபுறமான பகுதிக்கு தூக்கி சென்று 3 பேரும் கூட்டு பலாத்காரம் செய்தனர்.

இவை அனைத்தும் கணவன் கண்ணெதிரிலேயே நடந்தது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த அவர் போலீசாரை அழைத்து வருவதற்காக அங்குள்ள ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு ஓடி சென்றார். போலீஸ் நிலைய கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் போலீசார் கதவை திறக்கவில்லை. இதையடுத்து ரெயில் நிலையத்தின் வெளியே ஓடிவந்து அங்கிருந்த ஆட்டோ டிரைவர்களிடம் இதுகுறித்து முறையிட்டார்.

அவர்கள் ரெயில் நிலைய போலீசாரிடம் புகார் செய்யும்படி கூறினர். இதையடுத்து மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு வந்து கதவைத் தட்டிய போது கதவை திறந்து வந்த போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது 3 பேரும் அங்கு நின்று கொண்டிருந்தனர். போலீசார் 3 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் நேதாஜி நகரை சேர்ந்த விஜய் கிருஷ்ணா (20), நிகில் (20) மற்றும் 18 வயது நிரம்பாத சிறுவன் என தெரியவந்தது. அவர்கள் 3 பேரும் பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் எனவும் மதுபோதையில் பலாத்காரத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து இளம்பெண்ணை மீட்ட போலீசார் அவரை சிகிச்சைக்காக ஓங்கோல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ரெயில் நிலையத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனை கண்டித்து ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மகளிரணியினர் மற்றும் தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal