கர்நாடகத்தில் ஒரு பெண் தான் கற்புக்கரசி என நிரூபிக்க கையில் கற்பூரம் ஏற்றினார். ஆனால் அவரது கை கருகிய பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:- கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் வேம்கல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வீரனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தனது மனைவியின் நடத்தையில் ஆனந்த்திற்கு சந்தேகம் இருந்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஆனந்த் தனது மனைவியிடம் உனது நடத்தையின் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. இந்த சந்தேகத்தை போக்க கையில் கற்பூரம் ஏற்றி நீ கற்புக்கரசி என நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து ஆனந்தின் மனைவியும் தனது உள்ளங்கையில் கற்பூரத்தை ஏற்றி உள்ளார். அப்போது தீ அவரது கை முழுவதும் பரவி எரிந்தது. இதனால் அவரது கை கருகிவிட்டது. ஆனாலும் ஆனந்த் தனது மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லவில்லை என்று தெரிகிறது.

இதுபற்றி அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் ஆனந்தின் மனைவியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சம்பவம் குறித்த புகாரின்பேரில் ஆனந்த் மீது வேம்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal