தமிழகத்தில் மாஸ்க் அணியாமல் சென்றால் 500 ரூபாய் அபராதம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து முதல்வர் தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2,593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,57,545 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நாடு முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5,22,193. நாட்டில் தற்போது கொரோனாவுக்கு 15,873 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணிகளும் நிறைவடைந்துள்ளன. நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக பிரதமர் மோடி வரும் 27-ந் தேதி மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை அதிகாரிகளுடன் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து ஆலோசிக்க உள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது, ஊரடங்கு அமல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal