கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 220 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அரசு வக்கீல் கூறியுள்ளார். மேலும் இன்னும் சில முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்த இருப்பதாகவும் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்.

ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நடந்து வருகிறது. வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, குற்றச்சாட்டப்பட்ட நபர்களான சயான், வாளையார் மனோஜ் ஆஜராகினர். அரசு தரப்பில் வக்கீல் ஷாஜகான், கனகராஜ் ஆஜராகினர்.

விசாரணை துவங்கியதும், அரசு தரப்பு வக்கில் ஷாஜகான், ‘‘குற்றச்சாட்டப்பட்ட நபர்கள் சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதால், அவ்வழக்கு நிலுவையில் உள்ளது. விசாரணைக்குகால அவகாசம் தேவை’’ எனதெரிவித்தார். இதனை ஏற்ற மகிளா கோர்ட் நீதிபதி ஸ்ரீதரன் வழக்கை ஜூன் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அரசு வக்கீல் ஷாஜகான் கூறுகையில், ‘‘தனிப்படை போலீசார் இதுவரை, 220 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். வழக்கு விசாரணை தற்போது முக்கிய கட்டத்தில் உள்ளது. இவ்வழக்கு தொடர்பாக மேலும், சில முக்கிய நபர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal