கல்லூரி பேராசிரியர் ஒருவர் மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த விவகாரத்தில், தற்போது கைதாகி சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணிபுரிந்து வந்த பிரேம்குமார் என்பவர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி பேராசிரியர் மீது சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் பிரேம்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு உதவிப் பேராசிரியர் பிரேம்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது இது தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் பிரேம்குமார் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி குமரகுரு முன்னிலையில் சரண் அடைந்தார்.

இந்த வழக்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கு என்பதால் புகார் தாரரையும் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின்போது புகார் கூறிய பெண், தான் கொடுத்திருந்த புகார் உண்மையானது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாவட்ட நீதிபதி குமரகுரு உதவி பேராசிரியர் பிரேம்குமாரை வரும் 29 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal