கர்நாடகாவில், ஒப்பந்ததாரர் தற்கொலை செய்த விவகாரத்தில் அமைச்சர் ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் போர்க்கொடி தூக்கியுள்ளது.

கர்நாடகாவில் சிவில் கான்ட்ராக்டரான சந்தோஷ் பாட்டீல், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஈஸ்வரப்பா ஒப்பந்த தொகையில் 40 சதவீதம் லஞ்சம் கேட்பதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். இதை மறுத்த ஈஸ்வரப்பா சந்தோஷ் பாட்டீல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், உடுப்பியில் உள்ள ஒரு ஓட்டலில் சந்தோஷ் பாட்டீல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் தன் மரணத்திற்கு ஈஸ்வரப்பா கொடுத்த தொல்லை தான் காரணம் என ‘வீடியோ’ பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ஈஸ்வரப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்த, காங்கிரஸ் கட்சியின் சிவக்குமார், சித்தராமையா தலைமையிலான குழுவினர், ஈஸ்வரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ‘‘ஒப்பந்ததாரர் மரணம் தொடர்பாக ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தகவல்களையும் சேகரித்து வருகிறோம். ஈஸ்வரப்பாவுடன் பேசுவேன். பதவி விலகுவது குறித்து அவர் என்ன கூறினார் என தெரியாது. நேரடியாக அவருடன் பேசும் போது தெளிவு கிடைக்கும்’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal