தமிழகத்தில் சில இடங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக – வட இலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,

இன்று, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில், வத்திராயிருப்பு(விருதுநகர்) 12 செ.மீ., கூடலூர்(தேனி) 10, பேரையூர்(மதுரை), மீமிசல்(புதுக்கோட்டை), வைகை அணை(தேனி) தலா 6 செ.மீ., குறிஞ்சிப்பாடி(கடலூர்), பிலவாக்கல்(விருதுநகர்), சோழவந்தான்(மதுரை), பெரியகுளம்(மதுரை), பெரியகுளம்(தேனி), ஆயக்குடி(தென்காசி), தேக்கடி(தேனி) தலா 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

ஏப்.,10,11 தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் கேரள கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 – 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தாமரை கண்ணன் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal