வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு, நன்றாக வாதடவில்லை என்று எடப்பாடியார் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், முதல்வரை அன்புமணி ராமதாஸ் சந்தித்திருப்பதுதான் தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி, பாமக தலைவர் ஜிகே மணி உள்ளிட்ட 7 பேர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

முதல்வரை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, ‘‘உச்சநீதிமன்ற தீர்ப்பில் உள்ள சாதகமான அம்சங்களை எல்லாம் முதல்வரிடம் கூறி அடுத்த கட்டமாக எங்கள் கோரிக்கை என்ன என்பதை விளக்கமாக சொல்லும் வகையில் முதல்வரை சந்தித்தோம். முதல்வருடனான சந்திப்பு நல்லபடியாக அமைந்தது. மீண்டும் சட்டம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்தோம். உச்சநீதிமன்றம் தீர்ப்பில் மாநில அரசுக்கு எல்லா அதிகாரமும் உள்ளது எனவும், உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்றும் சாதகமான அம்சங்களை கூறியுள்ளது என்பதை விளக்கமாக கூறினோம்.

வன்னியர் இட ஒதுக்கீடு புள்ளி விவரம் தான் சிக்கலாக உள்ளது. புள்ளிவிவரம் நம்மிடம் உள்ளது. அதனை சேகரித்து சட்டசபையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்தோம். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என முதல்வர் கூறியுள்ளார். தமிழக அரசு நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து தான் வாதாடியது’’ என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘சரியாக வாதடவில்லை’ என்று கூறியு பிறகு, ‘தமிழக அரசு மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடியிருக்கிறது’ என்று அன்புமணி கூறியிருப்பதுதான், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆளும் தரப்பிற்கு ஆதரவாக அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்திருப்பது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலேயே தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்திருக்கும். ஆனால், பா.ம.க. எதிர்பார்க்கும் இடங்களை தி.மு.க. கொடுக்காது. அதோடு, உடனடியாக கூட்டணி வைத்தால், ‘வேறு சில’ விமர்சனங்கள் எழும் என்பதால் கூட்டணி வைக்கவில்லை.

வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைப்பதற்கான முன்னோட்டம்தான் இந்த சந்திப்பு. இந்த சந்திப்பில் ராமதாஸின் உடல்நலம் பற்றியும் முதல்வர் ஸ்டாலின் விசாரித்தபோது, அன்புமணி நெகிழ்ந்து விட்டாராம். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. & பா.ம.க. கூட்டணி அமைவது உறுதி’’ என்றனர்.

தமிழக அரசியல் களத்தில் எதுவும் நடக்கலாம்..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal