அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா உரிமை கோரியதை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் இன்று வெளியாகவிருந்த தீர்ப்பை சென்னை உரிமையியல் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான கோப்புகளை சசிகலாவிடம் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வழங்கினர்.இதையடுத்து சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வராக பதவியேற்க காத்திருந்த நிலையில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அப்போது தினகரனை துணை பொதுச் செயலாளராக நியமித்தார்.

அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அதில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து 2017 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என அறிவிக்கக் கோரியும், பொதுச் செயலாளர் இல்லாமல் பொதுக் குழு கூட்டத்தை கூட்டி என்னை நீக்கியது செல்லாது என அறிவிக்கக் கூறியும் 2016 ஆம் ஆண்டு தன்னை பொதுச் செயலாளராக அறிவித்த தீர்மானம் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமியை கட்டுப்படுத்தும் என அறிவிக்கக் கோரி சசிகலா வழக்கு தொடர்ந்தார்.

அதிமுகவில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் சட்ட விரோதம் என உத்தரவிடக் கோரியும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த நிலையில் சசிகலா வழக்கை நிராகரிக்குமாறு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி மனுத் தாக்கல் செய்துள்ளார்கள்.

இந்த வழக்கு விசாரணையின் போது பொதுச் செயலாளராக சசிகலா உரிமை கோர வாய்ப்பு இல்லை, கட்சியும் சின்னமும் தங்களிடம் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளதாகவும் கூறியிருந்தனர். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும் அரசியல் களம் சூடுபிடிக்கும் நிலையில் இருந்தது. இந்த நிலையில் சசிகலாவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிபதி ஸ்ரீதேவி தவிர்க்க இயலாத காரணத்தால் விடுமுறை என்பதால் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal