தி.மு.க. இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் இன்று தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொள்ளாச்சியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் திறந்த வேனில் நின்றபடி பேசிய உதயநிதி ஸ்டாலின்,

‘‘கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி செய்த அ.தி.மு.க. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தவே இல்லை. அவர்களுக்கு அந்த தெம்பு, தைரியம் இல்லை. ஆனால் தி.மு.க. ஆட்சி அமைத்த 9 மாதங்களிலேயே உள்ளாட்சி தேர்தலை நடத்தி காட்டியுள்ளோம். உள்ளாட்சி தேர்தலை நடத்துவதோடு மட்டுமில்லாமல் இதில் பெண்களுக்கு என்று 50 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்பட்டது. பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கிய கட்சி தி.மு.க. தான்.

நான் எப்போது இங்கு வந்தாலும் கோவை மக்கள் சிறப்பான வரவேற்பு, அன்பை கொடுப்பீர்கள். இப்போதும் அதுபோன்று கொடுத்துள்ளனர். ஆனால் உங்களை நம்ப முடியாது. ஏனென்றால் சட்டமன்ற தேர்தலிலும் இதுபோன்று தான் நான் வந்த இடத்தில் எல்லாம் வரவேற்பு கொடுத்தீர்கள். ஆனால் மாவட்டத்தில் ஒரு தொகுதியை கூட தி.மு.க.வுக்கு கொடுக்கவில்லை. இந்த முறை அது மாறிவிடும் என்று நினைக்கிறேன்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்றதும் நான் தி.மு.கவுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமில்லாமல், வாக்காளிக்காதவர்களும் தங்களுக்கு வாக்களித்திருக்கலாமே என்று சொல்லும் அளவுக்கு ஆட்சி நடத்துவேன் என கூறினார். அதன்படி தமிழக மக்கள் அனைவருக்கும் அவர் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். குறிப்பாக கோவை மாவட்டத்திற்கு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை முதல்- அமைச்சர் தந்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் ஆட்சி அமைத்த 9 மாதங்களில் 3 முறை கோவைக்கு நேரில் வந்து நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்துள்ளார்.

தி.மு.க ஆட்சி அமைத்த போது கொரோனா 2-ம் அலை உச்சத்தில் இருந்தது. அதனை தி.மு.க. அரசு திறம்பட கையாண்டு மக்களை காத்தது. ஆனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சி முதல் அலையின் போது ஊரடங்கு போட்டு மக்களை மிகவும் கஷ்டப்படுத்தியது. தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு எந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. அவர்கள் ஆட்சி செய்தபோது 1 வருடத்தில் வெறும் 1 கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருந்தது.

தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றதுமே முதல்- அமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் மக்களிடம் சென்று, கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முதல்- அமைச்சர் நேராக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டுக்கு சென்று, கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு அளிக்க கூடிய சிகிச்சை குறித்து கேட்டறிந்து, மக்களுக்கும், நோயாளிகளுக்கும் தைரியமூட்டினார்.

இதன் காரணமாக ஆட்சி பொறுப்பேற்ற 9 மாதங்களிலேயே 10 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம். இது தி.மு.க அரசு படைத்த சாதனையாகும். மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட 3-வது அலையும் நாம் மிக எளிதாக கடந்து விட்டோம். இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில், அனைத்து மாநில முதல்- அமைச்சர்களையும் தாண்டி நம்முடைய முதல்- அமைச்சர் நம்பர் ஒன் முதல்- அமைச்சராக உள்ளார்.

தி.மு.க ஆட்சியில் அமர்ந்தபோது, முன்பு ஆட்சி செய்த அ.தி.மு.க., அரசு கஜானாவில் 6 லட்சம் கோடி கடனை மட்டுமே வைத்திருந்தது. கொரோனாவிலும் கொள்ளையடித்த ஆட்சி என்றால் அது அ.தி.மு.க. தான். குறிப்பாக உள்ளாட்சித்துறையில் பினாயில் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்குவதில் பெருமளவு ஊழல் நடைபெற்றுள்ளது. உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணியின் 110 கோடி சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது.

தி.மு.க தேர்தல் அறிக்கையில் ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தோம். அதன்படி தான் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து சிறைக்கு தள்ளுவோம்.

எடப்பாடி பழனிசாமி தேர்தல் கூட்டத்தில் சட்டசபையை முடக்குவோம் என்று கூறி வருகிறார். அவர் எப்படி முதல்- அமைச்சராக பதவியேற்றார் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். கூவத்தூர் சென்று சசிகலா அம்மையார் காலில் விழுந்து ஆட்சி அமைத்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி. இப்படிப்பட்டவர் சட்டசபையை முடக்குவோம் என்று கூறுகிறார். அவர் முடக்குவதற்கு இது ஒன்றும் அடிமை அ.தி.மு.க. ஆட்சி கிடையாது.தற்போது தமிழகத்தில் நடப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க ஆட்சி. இங்கு மக்களாட்சி நடந்து கொண்டிருக்கிறது.

தி.மு.க தேர்தலின்போது தெரிவித்த ஒவ்வொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது. கொரோனா நிவாரண உதவி 4 ஆயிரம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், ஆவின் லிட்டருக்கு 3 குறைப்பு, பெட்ரோலுக்கு லிட்டருக்கு 3 குறைப்பு, மகளிர் சுய உதவிகுழு கடன் தள்ளுபடி, என நாங்கள் அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம். தொடர்ந்து அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம். விரைவில் குடும்ப தலைவிகளுக்கு அறிவிக்கப்பட்ட உதவித்தொகையான ரூ.1000-மும் வழங்கப்படும்’’இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal