தமிழக அரசியல் களத்தில் குதிரை பேர விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும் அமித் ஷாவை சந்திக்க டெல்லி செல்லவிருப்பதாக வெளியான தகவல்கள் இன்னும் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.

2026 சட்டசபை தேர்தலில் அதிமுக சந்தித்தது மிகப்பெரிய தோல்வி என்பதுதான் உண்மை. காரணம், 2016 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் தான் அதிமுகவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியும் என்பது எடப்பாடி பழனிசாமியின் எண்ணம்.

ஆனால் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் என பெரும்படையே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பியது. ஓபிஎஸ் திமுகவில் இணைந்த நிலையில், சசிகலா தனியாக வேட்பாளர்களை நிறுத்தி பல தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தார்.

இதனால் அதிமுக பல தொகுதிகளில் மூன்றாவது, நான்காவது இடத்திற்கு கூட தள்ளப்பட்டது. மேலும் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் பக்கம் திரும்பி வருகின்றனர். இதை அடுத்து தேர்தல் தோல்வி குறித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் தான் எடப்பாடி பழனிச்சாமியே எதிர்பாராத ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்த கூட்டத்தில் பேசிய கும்பகோணம் பகுதி செயலாளர் பத்ம குமரேசன், “டெல்டா மாவட்டங்களில் அதிமுக ஒரு காலத்தில் மிக வலிமையாக இருந்தது. தற்போது வலிமையே இல்லை. எனவே மீண்டும் அதிமுகவை வலுப்படுத்த வேண்டும் என்றால் டிடிவி தினகரன் அதிமுகவில் சேர்க்க வேண்டும்” என கூறினார். “டிடிவி தினகரன் தனியாக இருப்பதால் திமுக உள்ளிட்ட கட்சிகள் தான் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. நம் இருவரும் ஒன்று சேர்ந்தால் கட்சிக்கு கூடுதல் பலமாக இருக்கும்” என கூறியுள்ளார்.

இதனால் அதிர்ந்து போன எடப்பாடி பழனிசாமி,” டிடிவி தினகரன் கூட்டணியில் இருப்பதால் அவரை விமர்சிக்க முடியாமல்,டிடிவி தற்போது தனியாக ஒரு கட்சியை நடத்தி வரும் நிலையில் கூட்டணியில் வேண்டுமானாலும் சேர்க்கலாம். அதிமுகவில் சேர்க்க முடியாது. மேலும், நாம் இருவரும் கூட்டணியில் இருப்பதால் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற முடியும்” என பதில் அளித்து அந்த விவகாரத்தை முடித்து வைத்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த விவகாரம் தான் அதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதே நேரத்தில் இந்த தகவலை கேட்டு டிடிவி தினகரன் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறாராம். எப்படியாவது அதிமுக தலைமையை கைப்பற்ற வேண்டும் என நினைத்து முடியாமல் போனதால் கட்சியை ஆரம்பித்து வரும் நிலையில், தற்போது அதிமுகவினரே தனக்காக குரல் கொடுத்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி இருக்கிறாராம். இது ஒரு புறம் இருக்க அதிமுகவில் அண்ணாமலையை சேர்க்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை எழுந்து வருகிறது.

ஒருபுறம் அண்ணாமலை, மறுபுறம் தினகரன் என இரண்டு பெரிய தலைகளை கட்சிக்குள் கொண்டு வர முடியுமா என எடப்பாடி பழனிச்சாமி யோசிக்கும் போது, சிலர் சசிகலாவையும் அழைத்து வரவேண்டும் என கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் பெரும் நெருக்கடியில் இருக்கிறார் எடப்பாடி என்கின்றனர் டெல்டா அதிமுகவினர். இந்த நிலையில் தான் தற்போது தமிழக அரசியலில் மேலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் தகவல் வெளியாகியிருக்கிறது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரை டெல்லிக்கு வருமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுதிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஜூலை மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் இந்த ஆலோசனை நடைபெற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் வியூகங்கள் குறித்து அமித்ஷா உடன் ஆலோசிக்கப்படலாம் என்றும் அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது எது எப்படி இருந்தாலும் கட்சிக்கு வெளியேயும் உள்ளேயும் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி அதிகரித்து வருவது என்னவோ உண்மைதான் என்கின்றனர் அதிமுகவினர்.

தவிர, அ.தி.மு.க.வை எதிர்காலத்தில் வழிநடத்தப் போவது டி.டி.வி.யா? அண்ணாமலையா? என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனும் அ.தி.மு.க.வில் நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal