கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமியை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி, தமிழகத்தில் அரசு என எதுவும் உள்ளதா என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளது. அங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் வட மாநில தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு சிப்காட் வளாகத்திலேயே குடியிருப்பும் உள்ளது. அங்கு 3 வயது சிறுமி மாயமாகியுள்ளார். சிறுமி எங்கு தேடியும் கிடைக்காததால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இதனிடையே அருகில் உள்ள முட்புதிரில் குழந்தை கண்டறியப்பட்டது. உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டார். அவரை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிறும மரணமடைந்துவிட்டார். அதே வளாகத்தில் உள்ள வட மாநில இளைஞர்கள் 4 பேர் குழந்தையை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி எம்பியும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘கும்மிடிப்பூண்டியில் சமூக விரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு என எதுவும் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

‘பொறுப்பு’ என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?’’ என அவர் தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal