சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைத்துள்ளது. விஜய் முதலமைச்சராகியுள்ளார். அவருடன் 9 பேர் அமைச்சராக பதவியேற்றார்கள். ஆனால் சுமார் 10 நாட்களுக்கு மேலாகியும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை. தவெக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
இதில் அதிமுக வேலுமணி, சி.வி சண்முகம் அணியினர் இடம்பெறுவார்களா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் அதிமுக அமைச்சரவையில் இடம்பெற விசிக, கம்யூனிஸ்ட்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தவெக அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமென விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட்களுக்கு தவெக சார்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரடி அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற வேண்டும். அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து விசிக, ஐயூஎம்எல் ஆகியோரும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும். அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து விசிக, ஐயூஎம்எல் ஆலோசனை நடத்தி வருகிறது. சமூக நீதி கொள்கையுடைய அனைத்து கட்சிகளும் அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து சிந்திக்க வேண்டும்.
இந்த அரசு சமூக நீதி, மதச்சார்பின்மையில் உறுதியாக இருக்கும். அந்தக் கட்சிகளின் கொள்கையை நாங்கள் மதிக்கிறோம். அமைச்சரவையில் விசிக இடம்பெற திருமா அண்ணனுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட அனைத்து சமூக நீதி தலைவர்களும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று முதலமைச்சர் நினைக்கிறார். விசிக, கம்யூனிஸ்ட்கள், ஐயூஎம்எல் யோசித்து முடிவு செய்ய வேண்டும்.
தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுக எதிர்க்கட்சியாக செயல்பட்டிருக்க வேண்டும். மக்களின் தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டார். பின்புற வாசல் வழியாக பழனிசாமி ஆட்சியை பிடித்து முதலமைச்சராக முயற்சித்தார். எடப்பாடியும், திமுகவும் இணைந்து தான் குதிரை பேரம் நடத்தினார்கள். திமுகவும் தங்களின் கொள்கையை மறந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிக்க முடிவு செய்தனர்.
திமுக ,அதிமுக இணைந்து ஆட்சியமைக்க ஸ்டாலின், உதயநிதி முயன்றனர். அதிமுகவுடன் இணைந்து மக்களின் தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டது திமுக. அமைச்சர் பதவிக்காக சி.வி சண்முகம் எங்களுக்கு ஆதரிக்கவில்லை. தங்கள் கட்சியை பாதுகாப்பதற்காகவே அவர்கள் தவெகவை ஆதரித்தனர். திமுக தவறான தகவல்களை பரப்பி வருகிறது. நாங்கள் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை”என்றார்.
