மண்டலப் பொறுப்பாளர் எ.வ.வேலுவுக்கு பொன்முடி ‘செக்’ வைத்திருப்பதுதான் அறிவாலயத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி ஏழு மண்டலப் பொறுப்பாளர்களை அண்மையில் அறிவித்தது திமுக தலைமை. இதில் விழுப்புரத்தை உள்ளடக்கிய வடக்கு மண்டலத்தின் பொறுப்பாளராக அமைச்சர் எ.வ.வேலு நியமிக்கப்பட்டார். இதில் எழுந்த புகைச்சலை அடக்க, எட்டாவது மண்டலப் பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
‘சீனியர் அமைச்சர்களே எனது தூக்கத்தை கெடுத்தால் என்ன செய்வது?’ என மு.க.ஸ்டாலின் பேசியபோது சிரித்துக்கொண்டிருந்த பொன்முடி, தனது ‘வாய் பேச்சால்’ இன்றைக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவியை இழந்து இருக்கிறார்.
இந்த நிலையில், அவருக்கு பிடிக்காத அமைச்சர் எ.வ.வேலுவை வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக தலைமை அறிவித்தது. ஏற்கெனவே, விழுப்புரத்தில் இருந்து பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சராக பொன்முடியை தவிர்த்துவிட்டு வேலுவை நியமித்ததையே பொன்முடி தரப்பினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
இதற்கிடையில் வேலுவின் வருகையை கொண்டாடிய பொன்முடிக்கு பிடிக்காத விழுப்புரம் மாவட்ட எம்எல்ஏ-க்களும், கட்சி நிர்வாகிகளும் வேலுவை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். விழுப்புரம் எம்எல்ஏ-வான லட்சுமணன், செஞ்சி எம்எல்ஏ-வான முன்னாள் அமைச்சர் மஸ்தான் ஆகியோர் சுவர் விளம்பரங்கள், மற்றும் போஸ்டர்களில் எ.வ.வேலுவின் பெயரையும் படத்தையும் பெரிதாகப் போட்டதுடன் பொன்முடியின் படத்தையோ பெயரையோ போடாமல் இருட்டடிப்பு செய்தார்கள்.
இதையெல்லாம் பார்த்துவிட்டு ஆவேசமான பொன்முடி தரப்பினர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைப் போலவே, விழுப்புரத்தையும் எ.வ.வேலு தனது கைக்குள் கொண்டுபோய் விடுவாரோ என அச்சப்பட்டார்கள். வேலு நியமனம் தொடர்பாக முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் தனது ஆதங்கத்தை பொன்முடி வெளிப்படுத்தியதாகவும் சொல்கிறார்கள். இதையடுத்தே, கடலூர் கிழக்கு, விழுப்புரம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டங்களுக்கான தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை நியமித்திருக்கிறது தலைமை.
மண்டலப் பொறுப்பாளர்களில் வன்னியர் சமூகத்திக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்ற குறையைப் போக்கவே எம்ஆர்கே-வை மண்டலப் பொறுப்பாளராக நியமித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் எதிரும் புதிருமாக இருந்த எம்ஆர்கே-யும், பொன்முடியும் அதிமுக வரவுகளான லட்சுமணன் உள்ளிட்டவர்களின் குடைச்சலை சமாளிக்க தற்போது கைகோத்திருக்கிறார்கள்.
இதனிடையே, தேர்தல் பொறுப்பாளராக எம்ஆர்கே நியமிக்கப்பட்டதை வரவேற்று சுவர் விளம்பரங்களை தீட்டிய பொன்முடி ஆதரவாளர்கள், அவற்றில் பொன்முடியின் பெயரையும் பெரிதாகப் போட்டு வருகிறார்கள். ஆக, தேர்தல் வெற்றிக்காக அறிவிக்கப்பட்ட மண்டலப் பொறுப்பாளர்கள் நியமனத்தால் விழுப்புரம் திமுக-வுக்குள் கோஷ்டி பூசல் இன்னும் அதிகரித்திருக்கிறது.
தி.மு.க.வின் இந்த கோஷ்டிப் பூசலை அ.தி.மு.க.வின் சீனியரான சி.வி.சண்முகம் தனக்கு சாதகமாகப் பயன்படுத்த ஆயத்தமாகிவருவதாகவும் தகவல்கள் வருகிறது.