புதிய விரிவான மினி பேருந்து திட்டம் வரும் ஜூன் 15-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, ஏற்கெனவே போக்குவரத்து சேவையுள்ள இடங்களில் 8.75 கிமீ மினி பேருந்து இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 2,950 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகளின் சேவையை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் புதிய விரிவான மினி பேருந்து திட்ட வரைவறிக்கையை தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டது.
இதுதொடர்பான அரசிதழில், தனியார் மினி பேருந்துகளுக்கு போக்குவரத்து சேவையில்லா இடங்களில் 17 கிமீ பயணிக்கவும் மற்றும் சேவை உள்ள இடங்களில் 4 கிமீ இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தற்போது, போக்குவரத்து சேவை இருக்கும் இடங்களில் மேலும் 4 கிமீ கூடுதலாக இயக்க மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 100 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் பகுதிகளுக்கு பேருந்து சேவை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் சென்னையின் உட்பகுதியில் மினி பேருந்துகள் இயக்க அனுமதி இல்லை. இருப்பினும், பயணிகளின் தேவைக்கேற்ப திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மினி பேருந்துகளை இயக்குவது குறித்து பரிசீலனை செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு தமிழ்நாடு மினி பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்டவை எதிர்ப்பு தெரிவித்தன. இதுதொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம், உள்துறைச் செயலர் தலைமையில் சென்னை, கலைவாணர் அரங்கில் ஜூலை 22-ம் தேதி நடைபெற்றது.
இதில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை கருத்தில் கொள்ளாமல் மினி பேருந்துகளுக்கான அரசாணை வெளியிட்டதாக சிஐடியு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. பின்னர், அரசாணை திரும்பப் பெறப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து 23 கருத்துக்களுக்கு விளக்கமளித்து, புதிய விரிவான மினி பேருந்து திட்ட விவரங்களை புதிய அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்களால் தேவையான அனைத்து இடங்களுக்கும் பேருந்துகளை இயக்க முடியாது. அதேநேரம், இந்தத் திட்டம் போக்குவரத்துக் கழகங்கள் இயக்கும் மினி பேருந்துகளுக்கு தடையாக இருக்காது. அனுமதியில்லா வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காகவே பேருந்து சேவையில்லா இடத்தில் எங்கு வேண்டுமானாலும் மினி பேருந்தை நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஏதாவது ஒரு பேருந்து நிறுத்தம் அல்லது பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வந்து செல்லும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, போக்குவரத்து சேவையுள்ள இடங்களில் மேலும் 750 மீட்டர் (மொத்தம் 8.75 கிமீ) கூடுதலாக இயக்க அனுமதி வழங்கப்படுகிறது. கூடுதலாக ஒரு கிமீ தொலைவில் அரசு மருத்துவமனை உள்ளிட்டவை இருந்தால் அந்தத் தொலைவுக்கும் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்படும். இவ்வாறாக புதிய திட்டம் வரும் ஜூன் மாதம் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 1,842 புதிய மினி பேருந்துகள் சேவை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் போக்குவரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்திருந்தார். அந்த வகையில் புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டணம்: கட்டணத்தை பொருத்தவரை குறைந்தபட்சம் 2 கிமீ-க்கு ரூ.4, 26 கிமீ-க்கு ரூ.16 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம், 2011-ம் ஆண்டு நிலவரப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை திருத்தியமைக்க வேண்டும் என மினி பேருந்து உரிமையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.