அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சு.ரவி, முன்னாள் எம்.பி. கோ.அரி உள்பட நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட விவகாரத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘‘இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்படமாட்டோம்’’ என்று அவர் எச்சரித்துள்ளார்.

அரக்கோணம் அருகே இச்சிப்புத்தூரில் உள்ள எம்ஆர்எப் தொழிற்சாலையில் கடந்த சில நாள்களாக தற்காலிக தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று காலை ஆலை முன்பாக நுழைவு வாயில் கூட்டம் நடத்த அரக்கோணம் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ. சு.ரவி, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமல கண்ணன், முன்னாள் எம்.பி. கோ அரி, ஒன்றிய அண்ணா தி.மு.க. செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் வந்தனர்.

அப்போது அங்கிருந்த போலீசார் ஆலை நுழைவு வாயில் கூட்டம் நடத்த நீதிமன்றம் தடை உத்தரவு விதித்திருப்பதாக அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர். இருந்தும் தடையை மீறி அங்கு நுழைவு வாயில் கூட்டம் நடத்த முயன்றதாக எம்.எல்.ஏ. சு.ரவி, தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமல கண்ணன், முன்னாள் எம்.பி. கோ.அரி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் வேனில் அழைத்துச் செல்லப்பட்டு அரக்கோணத்தை அடுத்த சாலை கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அரக்கோணம் அண்ணா தி.மு.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

‘‘அரக்கோணம் எம்.ஆர்.எப். அண்ணா தொழிற்சங்கம் சார்பில் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட தொழிலாளர்களின் அடிப்படை கோரிக்கைகளை விளக்கவும், மே தின தொழிலாளர்கள் நல்வாழ்த்துகளைக் கூறும் வகையில் வாயிற் கூட்டம் நடத்தி, சங்கக் கொடி ஏற்றி இனிப்பு வழங்க வருகை தந்த ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோ.அரி உள்ளிட்ட கழக நிர்வாகிகளை தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசு இன்று காலை கைது செய்த அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

இது போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் கழகத்தினர் அல்ல. எத்தனை அடக்குமுறைகளை ஸ்டாலினின் அரசு ஏவி விட்டாலும் அவைகளை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை எங்களுக்கு எப்போதும் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்’’ இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal