அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி தேர்தலுக்கு ஒருவருடத்திற்கு முன்பே அமைந்துவிட்டதால் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதாவது, ‘நாங்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு சென்றுவிடுவோம்… எடப்பாடி பழனிசாமி எங்களுக்காக கதவை திறந்து வைத்திருக்கிறார்’ என்று வி.சி.க., கம்யூனிஸ்டுகள் உள்பட காங்கிரஸ் ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் முன்பு கூறிவந்தன.
ஆனால், தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இணைந்து விட்டதால், ‘பி.ஜே.பி. எதிர்ப்பை மட்டுமே வைத்து அரசியல் செய்யும்’ தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் தற்போது அ.தி.மு.க. கதவு எங்களுக்காக திறந்திருக்கிறது என்று சொல்லமுடியாது. அப்படிப்பட்ட நிலைதான் இன்றைக்கு தமிழகத்தில் உருவாகியிருக்கிறது. த.வெ.க.விற்கு எத்தனை சதவீதம் வாக்குகள் இருக்கிறது என்பது தெரியவில்லை. தவிர, இத்தனை ஆண்டுகாலம் பழமையான அரசியல் கட்சிகள் திடீரென்று நேற்று அரசியல் கட்சி ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இணையவும் மாட்டார்கள்.
இந்த சூழ்நிலையில்தான், ‘நாங்கள் கொடுப்பதை வாங்கிக்கொண்டு போட்டியிடுங்கள்’ என தி.மு.க. தலைமை கூறிவருகிறதாம். இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம்.
‘‘சார், தி.மு.க. கூட்டண உடையும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், இதை வைத்தே தி.மு.க. கூட்டணியில் அதிக இடங்களையும், அதிக ஸ்வீட் பாக்ஸ்களையும் வாங்கிடலாம் என கணக்குப் போட்டு காய்நகர்த்தியது தி-.மு.க. கூட்டணி கட்சிகள். இந்த நிலையில்தான் அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி அமைந்துவிட்டது.
கடந்த காலங்களில் தேர்தல் நெருக்கம் வரை கூட்டணி கணக்குகள் மாறிக்கொண்டே இருக்கும். அதனால் சிறிய கட்சிகள் பேர வலிமையின் மூலம் கூடுதல் தொகுதிகளை பெறும் சூழல் இருந்தது. தற்போது தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே அதிமுக & பாஜக கூட்டணி அமைந்துவிட்டது. இதனால், பாஜக-வை எதிர்க்கும் கட்சிகளால் அதிமுக பக்கம் இனி செல்லவே முடியாது. எனவே வழக்கம் போல திமுக கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக்கொண்டு அமைதியாக போக வேண்டிய சூழலே இம்முறையும் உருவாகியுள்ளது.
அதிமுக -& பாஜக கூட்டணி ஆட்சிக்கு வருவதை தடுக்க, கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக் கொண்டு நில்லுங்கள் என இம்முறையும் தோழமைக் கட்சிகளுக்கு திமுக சமாதானம் சொல்லும். எனவே, தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுக்கு பேரம் பேச முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.