‘நாங்கள் தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கிறோம்’ என்று எப்போது சொன்னோம் என்று கேட்டார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில்தான், ‘வாக்குறுதி கொடுத்தது உண்மை. நேரம் வரும்போது சில விஷயங்களை சொல்வேன் என்று எல்-.கே.சுதீஷ் கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த எல்.கே.சுதீஷ், ‘‘2024 மக்களவைத் தேர்தல் வரைக்கும் அவர்களோடு கூட்டணியில் இருந்திருக்கிறோம். 2024 மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியை விட்டு அதிமுக விலகினாலும் நாங்கள் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டோம். இப்போது அதிமுக-வும் பாஜக-வும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இனி, மீண்டும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தேமுதிக அக்கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என்பதை எங்களது பொதுச்செயலாளர் உரிய நேரத்தில் முடிவு செய்வார்.
ஜனவரி 9-ல் கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெற உள்ளது. அதில், தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் முறைப்படி அறிவிப்பார்’’ என்றவரிடம், ‘ தேமுதிக-வுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக முன்னமே வாக்குக் கொடுத்திருந்ததா அதிமுக?’ ‘‘உறுதியாகக் கொடுத்தார்கள். முழுக்க முழுக்க உண்மை இது. நேரம் வரும்போது அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்வேன்.’’ என்றார்.
மேலும், ‘அப்படி யாருக்கும் எந்த உத்தரவாதமும் தரப்படவில்லை என்கிறாரே இபிஎஸ்?’
‘‘அதிமுக அளித்த உத்தரவாதத்தால் தான் நான் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இதற்கு முன் நான் 2009-ல் கள்ளக்குறிச்சியிலும் 2014-ல் சேலத்திலும் போட்டியிட்டேன். சேலத்தில் எனக்காக மோடி பிரச்சாரம் செய்தார். 2019-ல் மீண்டும் பாஜக கூட்டணியில் கள்ளக்குறிச்சியில் போட்டியிட்டேன். 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் யோசிக்கிறேன்’’ என்றார்.
ஆக மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் கட்சித் தலைவர்களிடத்தில் நம்பிக்கையை இழந்து வருகிறார் என்பது மட்டும் உண்மை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.