தென்மாவட்டங்களை குறிவைக்கும் விதமாக பா.ஜ.க. மேலிடம், அங்கு ‘பவர்புல்’லாக இருக்கும் நயினார் நாகேந்திரனை மாநிலத் தலைவராக அறிவித்துள்ள நிலையில், ஆளும் தி.மு.க.விலோ நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உட்கட்சிப் பூசலும், கோஷ்டி பூசலும் உச்சத்தில் இருக்கிறது என்ற உஷ்ணத்தில் இருக்கிறார்கள் உடன் பிறப்புக்கள்.
‘‘அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கலையும் உருவுவேன் என்று சொன்ன முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும், 100 அடி கழக கொடிக்கம்பத்தை இடித்த தென்காசி மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலனுக்கும் என்ன வித்தியாசம்?’’ என உடன் பிறப்புக்களே கேள்வி எழுப்புகிறார்கள். தவிர, இந்த விவகாரத்தல் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்டத்தில் உள்ள நடுநிலையான உடன்பிறப்புக்கள் கோரிக்கையும் வைக்கிறார்கள்.
இது பற்றி நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள நடுநிலையான நிலையான உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம்.
‘‘தென்காசி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தென்காசி & திருநெல்வேலி மெயின் ரோட்டில் கே.டி.சி. நகரில் தி.மு.க. கழகத்திற்கு சொந்தமான 20 செண்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சிவ பத்மநாதன் கழகத்திற்கு வழங்கினார்.
இந்த இடத்தில் கழக பவள விழாவை முன்னிட்டு 100 அடி கொடிக்கம்பம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்த நிலையில் கொடிக்கம்பம் ஏற்பாடு செய்யப்படாத நிலையில் நிகழ்ச்சி தொடர்ந்து காலதாமதம் ஆனது.
அடுத்து, கலைஞரின் 101 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இங்கு 101 அடி கொடிக்கம்பம் கழகத் தலைவர் தலைமையில் அல்லது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சிவ பத்மநாதன் ஏற்பாடு செய்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில், மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் ஜெயபாலன் தூண்டுதலின் பெயரில் அவரின் உதவியாளராக இருக்கும் தென்காசி தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜே.கே.ரமேஷ் மற்றும் மாவட்ட பிரதிநிதி பொன் செல்வன் மற்றும் யோவான், சந்தரபாண்டியபுரம் மாரியப்பன் கடையம் சேர்மச் செல்வன் ஆகியோர்கள் முன்னிலையில் ராட்சச ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு 20 அடி பள்ளம் தோண்டி, கொடிக்கம்பத்தின் பீடத்தை உபயோகப்படுத்த முடியாத அளவிற்கு சிதைத்து விட்டார்கள்.
இதற்கு பதிலடியாக கே.டி.சி. நகர் பாலசத்திரத்தில் கலைஞர் சிலை அமைப்பதற்கு ஜெயபாலன் தரப்பு இடத்தை தயார் செய்துவந்த நிலையில், அந்த இடத்தில் சிலை வைக்க முடியாத அளவிற்கு சிவ பத்மநாபன் தரப்பு இடத்தை சேதப்படுத்தியுள்ளனர். எனவே, இரண்டு தரப்பும் அம்மாவட்ட மக்களிடமும், உடன் பிறப்புக்களிடமும் அவப்பெயரை பெற்றுள்ளதால், இருவர் மீதும் கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் கழகம் 200க்கும் மேலான தொகுதிகளை வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்த இரண்டு சம்பவங்களும் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது’’ என்றனர்.
தென்காசி மாவட்டத்தில் ஒரே கட்சிக்குள் இரண்டு கோஷ்டிகள் குறித்த விவகாரம் தலைமைக்கு தெரியுமா? தி.மு.க. தலைமை மௌனமாக இருப்பது ஏன்? என்பது குறித்து அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம்.
‘‘சார், முன்னாள் மாவட்டச் செயலாளர் சிவ.பத்மநாபன், ஜெயபாலன் இருவருமே கனிமொழியின் தீவிர ஆதரவாளர்கள். இவர்கள் மீது தலைமை ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என தென்காசியில் உள்ள நடுநிலையான உடன் பிறப்புக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கனிமொழியும் கோஷ்டி அரசியலை ஊக்குவித்து வருகிறாரா என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.
தவிர, நெல்லையிலும் தொடர் தோல்விகளை தி.மு.க. கண்டுவந்த நிலையிலும், ஆவுடையப்பனை தி.மு.க. தலைமை இன்னும் மாற்றாமல் ஏன் வைத்திருக்கிறது என்ற கேள்விகளை எழுப்புகின்றனர். ஏற்கனவே, கோவைக்கு சென்ற நடிகர் விஜய், அ.தி.மு.க, தி.மு.க.வின் கோட்டை என்று சொன்ன கொங்கு மண்டலத்தை தன்பக்கம் திரும்ப வைத்திருக்கிறார். அடுத்தடுத்து தென்மாவட்டங்களிலும் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்குள் தி-.மு.க.வில் களையெடுப்பு நடத்தி, நடுநிலையானவர்களுக்கு பதவி கொடுத்தால்தான், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தென்காசியிலும், நெல்லையிலும் தி.மு.க. வெற்றி பெறும்’’ என்றனர்.
ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் முதல்வர் மு.க.ஸ்டாலின் சாட்டையை சுழற்ற வேண்டும் என்கிறார்கள் தென்மாவட்ட உடன் பிறப்புக்கள்!