2026 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கும் நிலையில் தமிழகத்தில் விசாரணை (வருமான வரித்துறை, அமலாக்கத்துறை) அமைப்புகளின் வேகம் அதிகமாகியிருக்கிறது.

தி.மு.க. ஆட்சி அமைந்து 2 ஆண்டு நிறைவடைந்த நிலையில், மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை வளைத்தது. அமலாக்கத்துறைப் பிடியிலிருந்து இன்னும் செந்தில் பாலாஜியால் மீளமுடியவில்லை. மீண்டும் அமைச்சராகி ராஜினாமா செய்திருக்கிறது.

அடுத்தது பொன்முடி, துரைமுருகன், கே.என்.நேரு என சீனியர் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் மத்திய அரசின் புலனாய்வு விசாரணை அமைப்புகளின் பிடியில் சிக்கியிருக்கின்றனர். அந்த வகையில் அடுத்த அமலாக்கத்துறையின் பிடியில் பத்திரப்பதிவுத் துறை மூர்த்தி சிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

மதுரை மாவட்டத்தில் திமுகவின் முக்கிய நபர்களில் ஒருவர் பி.மூர்த்தி. நீண்டகால திமுக உறுப்பினரான இவர், மதுரை வெளிச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவர். கடந்த 2006இல் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், அதன் பின்னர் 2016 மற்றும் 2021 ஆண்டுகளில் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

கடந்த 2021ம் ஆண்டு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி அமைத்த போது, மூர்த்திக்குப் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மேலும், மதுரை திமுக வடக்கு மாவட்டச் செயலாளராகவும் இவர் உள்ளார். மதுரை மாவட்ட திமுகவில் முக்கிய நபரான அமைச்சர் மூர்த்தியின் மூத்த மகன் தியானேஷூக்கும் ஸ்மிர்தவர்ஷினிக்கும் இன்று மதுரையே வியக்கும் அளவுக்குப் பிரம்மாண்டமாகத் திருமண விழா நடைபெற்றது.

கடந்த 2022ம் ஆண்டு பாண்டி கோயில் அருகேயுள்ள மைதானத்தில் திருமணம் நடந்தது. அமைச்சர் மூர்த்தியின் இல்ல திருமண விவாவுக்கான ஏற்பாடுகள் கடந்த இரு மாதங்களாகவே பாண்டி கோயில் மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இதை அமைச்சரும் அவ்வப்போது நேரில் சென்று கவனித்து வந்தார். கோட்டை போன்ற பிரமாண்ட நுழைவு வாயில், மாநாடு போல ஒரு லட்சம் பேர் அமரும் பந்தல், ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் சாப்பிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இது தவிர விஐபிகள் சாப்பிடத் தனியாக டைனிங் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மேலும், மொய் வசூலிக்க என்று தனியாகவே சுமார் 50 ஹைடெக் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனியார் நிறுவனம் ஒன்று சார்பில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. பணம் எண்ணும் இயந்திரம், லேப்டாப் எனக் கச்சிதமாக அமர்ந்து அவர்கள் மொய் வசூலித்தனர். விஐபிக்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பலரும் அமைச்சர் இல்ல திருமண விழாவுக்கு மொய் கொடுத்தனர்.

திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஊரே வியக்கும் அளவுக்கு விருந்துகள் அளிக்கப்பட்டன. சைவ மற்றும் அசைவ உணவுகளுக்கு என தனித்தனியாகப் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சுமார் 2000 ஆடுகள், 5000 கோழிகள் வைத்து பிரியாணி உள்ளிட்ட அசைவ வகைகள் பரிமாறப்பட்டன. உணவைத் தயாரிக்க மட்டும் சுமார் 750 சமையல் கலைஞர்கள் ஈடுபட்டனர். இந்த கல்யாணத்திற்கு சுமார் 300 கோடி அளவில் அமைச்சர் செலவு செய்திருப்பார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர்.

இதற்கு அமைச்சர் மூர்த்தியும் விளக்கம் அளித்தார். இந்த நிலையில்தான் தீவு ஒன்றில் சொகுசு பங்களாவை அமைச்சர் தரப்பு வாங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதனை எல்லாம் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் கூர்ந்து கவனித்து வருகிறது. இந்த நிலையில்தான் அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி என்று கிசுகிசுக்கிறார்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal