‘போதைப் பொருளை பயன்படுத்தக் கூடாது… போதைக்கு அடிமையாகக் கூடாது…’ என தமிழக அரசு சார்பில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், திமுக ஆய்வு கூட்டத்திற்கு பின் மதுவுடன் கூடிய அசைவ விருந்து, புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர் மேற்கு, கிழக்கு, வடக்கு ஒன்றிய வாக்குச்சாவடி இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் திருக்கோவிலூர் அடுத்த சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், திமுக ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பெறுநர்கிள்ளி ஆகியோர் கலந்துகொண்டு இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு தேர்தல் குறித்தும் வாக்குச்சாவடியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.
கூட்டம் முடிந்து சட்டமன்ற உறுப்பினரும் தொகுதி பொறுப்பாளரும் சென்ற பிறகு 3 ஒன்றிய செயலாளர்கள் மூலமாக வந்திருந்த வாக்குச்சாவடி இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் என 300க்கும் மேற்பட்டோருக்கு மதுவுடன் (பீர் பாட்டிலுடன்) கூடிய அசைவ விருந்து வைக்கப்பட்டுள்ளது.
சாப்பாட்டு மேஜையின் மீது இலையுடன் ஆளுக்கு ஒரு பீர் பாட்டில் வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கும் காட்சிகள், புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. மது ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை முன்னிறுத்தி பேசி வருகிறது. திமுக ஒன்றிய செயலாளர்கள் ஒன்றிணைந்து தனியார் திருமண மண்டபத்தில் இளைஞர்களுக்கு மதுவுடன் கூடிய அசைவ விருந்து வைத்த சம்பவம் அனைவரிடமும் பேசுபொருளாய் மாறி உள்ளது.
‘‘நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்னையையும் உருவாக்கி இருக்கக் கூடாதே என்ற நினைப்போடுதான் நான் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னை தூங்கவிடாமல் கூட ஆக்கிவிடுகிறது. என் உடம்பை பாருங்கள். உங்களது செயல்பாடுகள் கழகத்துக்கும் – உங்களுக்கும் பெருமை தேடித் தருவது போல அமைய வேண்டுமே தவிர சிறுமைப்படுத்துவதாக அமையக் கூடாது. பொது நன்மைக்காக மட்டுமே இதனை நான் சொல்லவில்லை, உங்களது நன்மைக்காகவும் சேர்த்தே சொல்கிறேன். பொது இடங்களில் சிலர் நடந்து கொண்ட முறையின் காரணமாக கழகம் பழிகளுக்கும் ஏளனத்துக்கும் ஆளானது’’ என்று நொந்துபோய் பேசியிருந்தார்.
இப்படி பல முறை பேசியும் மூத்த தலைவர்கள் சிலர் அதை கேட்கவில்லை. இப்போது இனிமேல் இப்படி பேசுபவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று உணர்த்தும் விதமாக பொன்முடியின் அமைச்சர் பதவியும் நீக்கப்பட்டு உள்ளது. இப்போது திமுக இளைஞர்களும் முதல்வருக்கு மேலும் மேலும் துன்பத்தை உருவாக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர்.
தவிர, ஏற்கனவே கள்ளக்குறிச்சியில் விஷச்சாரயம் குடித்து பலர் உயிரிழந்த நிலையில், தி.மு.க. இளைஞரணி கூட்டம் முடிந்த பிறகு நடந்த ‘பீர் & பிரியாணி’ விருந்து மீண்டும் முதல்வரின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது.