அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினமா செய்ய இருக்கிறார் என கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘தமிழக அரசியல்’ வார இதழில் செய்தி வெளியிட்டிருந்தாம். அதே போல் அமைச்சர் பொன்முடியின் அமைச்சர் பதவிக்கும் சிக்கல் என எழுதியிருந்தோம். அதன்படியே இரு அமைச்சர்களும் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர்.

வனத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, பொதுக்கூட்டம் ஒன்றில், விலை மாதருக்கும், வாடிக்கையாளருக்கும் நடந்த உரையாடல் எனக்கூறி, சைவ, வைணவ சமயங்களின் புனித குறியீடுகளை ஒப்பிட்டு மிகவும் ஆபாசமாக பேசினார். அதனால், அவரை பதவியில் இருந்து நீக்கக்கோரி, உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
அதேபோல, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி, மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி, அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா’’ என்று கேள்வி எழுப்பியது.
அதனால், அவர் அமைச்சர் பதவியில் தொடர்ந்தால், ஜாமின் ரத்தாகும் சூழ்நிலை உருவானது. இவ்விரு அமைச்சர்களாலும், தமிழக அரசுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டது. அதை தவிர்க்க, இருவரும் ராஜினாமா செய்ய முதல்வர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. அதை ஏற்று அவர்கள் இருவரும் முதல்வரிடம் ராஜினாமா கடிதம் வழங்கியதாக செய்தி வெளியானது.
அவர்களின் ராஜினாவை ஏற்ற முதல்வர் ஸ்டாலின், அவற்றை கவர்னருக்கு பரிந்துரை செய்தார். அதற்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்தார். அத்துடன், மூன்று அமைச்சர்களின் துறைகளை மாற்றம் செய்தும், அமைச்சரவையில் புதிதாக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜை சேர்க்க அறிவுறுத்தியும், முதல்வர் அளித்த பரிந்துரையை கவர்னர் ஏற்றார்.
முதல்வர் பரிந்துரையின்படி, செந்தில் பாலாஜி வசமிருந்த மின்சாரத்துறை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடமும், செந்தில் பாலாஜி வசமிருந்த மது விலக்கு ஆயத்தீர்வை துறை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியிடமும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், வனம் மற்றும் கதர்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வசமிருந்த பால்வளத்துறை, புதிதாக அமைச்சராகும் மனோ தங்கராஜிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. ஏற்கனவே, பால்வளத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட, பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ., மனோ தங்கராஜ், மீண்டும் அதே துறைக்கு அமைச்சராக்கப்படுகிறார்.
இன்று மாலை 6:00 மணிக்கு, கவர்னர் மாளிகையில் நடக்கும் நிகழ்வில், அமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என, கவர்னர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை மாற்றத்தில், ஏற்கனவே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட, கிறிஸ்துவ நாடாரான மனோ தங்கராஜுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த முத்துசாமி, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சிவசங்கர் ஆகியோருக்கு, கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. யாதவர் சமூகத்தைச் சேர்ந்த ராஜ கண்ணப்பனுக்கு முக்கியத்துவம் அளிக்க, வனத்துறை வழங்கப்பட்டுள்ளது.
தவிர சீனியர் அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு ஆகியோர் மீதும் அமலாக்கத்துறை விசாரணை நடந்து வருவதால், இவர்கள் இருவர் பதவிக்கும் சிக்கல் இருக்கிறது என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்!