தமிழகத்தில் அனைத்து சமுதாயத்தைச் (ஜாதி) சேர்ந்தவர்களுக்கும் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் ராஜ்யசபா சீட் கொடுத்திருக்கிறது. ஆனால், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இதுநாள் ராஜ்ய சபா எம்.பி. சீட் கொடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் இரண்டு கட்சிகளையும் புறக்கணிக்கும் முடிவை முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எடுத்திருக்கிறார்கள்.
இது பற்றி முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், தமிழகத்தில் படுகர் & பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் முதல் உயர் சாதியை சேர்ந்தவர்கள் வரை ராஜ்ய சபா எம்.பி.யாக இருந்திருக்கிறார்கள். தவிர, முக்குலத்தோல் சமுதாயத்தில் மறவர், கள்ளர், பிரமலைக் கள்ளர் உள்பட பலருக்கும் ராஜ்ய சபா சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தவிர, நாடார், ரெட்டியார், 24 மனை தெலுங்கு செட்டியார் என அனைத்து சமுதாய, சாதியத்திற்கும் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுமே ராஜ்யசபா சீட் கொடுத்திருக்கிறது. ஆனால், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இதுநாள் வரை ராஜ்யசபா சீட் கொடுத்ததில்லை இரண்டு திராவிட கட்சிகளும்.
ஆனால், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், சிவகங்கை, மதுரை என பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பவர்கள் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அப்படியிருக்கும்போது, இதுநாள் வரை முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்குக்கூட தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் ராஜ்யசபா சீட் கொடுக்கவில்லை.
தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகளாலும் முத்தரையர் சமுதாயம் வஞ்சிக்கப்படுகிறது. இனியும் முத்தரையர் சமுதாயம் வஞ்சிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த முறை இரண்டு கட்சிகள் சார்பில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை டெல்லிக்கு அனுப்பவேண்டும். இல்லாவிட்டால் வருகிற சட்டமன்றத் தேர்தலில் இரண்டு (தி.மு.க., அ.தி.மு.க) கட்சிகளையும் வீட்டிற்கு அனுப்புவோம்’’ என்றனர் உறுதியாக!
இரண்டு கழகங்களும் முத்தரையர் சமுதாயத்தை புறக்கணிக்கிறது என்ற குரல் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. தேர்தலில் இது எந்தளவிற்கு எதிரொலிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்!