‘தி.மு.க.வை நம்பி விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை’ என்கிற ரீதியில் திருமாவளவன் பேசியிருப்பதுதான் தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்படாத என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட பி.ஜே.பி. தலைவர்கள் வரை எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில்தான் வி.சி.க.வில் இருந்துகொண்டே தி.மு.க.வை விமர்சித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா நீக்கப்பட்டார். தற்போது ஆதவ் அர்ஜுனா த.வெ.க.வில் தேர்தல் பிரிவு ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில்தான், விடுதலை சிறுத்தைக் கட்சி தொண்டர்களுடன் முகநூல் நேரலையில் பேசிய திருமாவளவன், “ஏதோ நாம் திராவிட முன்னேற்ற கழகத்தை மட்டுமே நம்பி கிடக்கிறோம் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அந்த அற்பர்களின் அவதூறுகளை நாம் கடந்து செல்கிறோம் என்றாலும் கூட இயக்க தோழர்கள் அதில் ஒரு தெளிவை பெற வேண்டும்.
தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும். அது ஒன்றும் பெரிய கம்ப சுத்திரம் இல்லை. எல்லா கதவுகளையும் திறந்து வைத்திருப்பது, ஒரே நேரத்தில் பலரோடு பேரம் பேசுவது, கூடுதலான பேரம் பலிக்கிற இடத்திலே உறவை வைத்து கொள்வது, கூட்டணியை தீர்மானிப்பது என்பது பெரிய ராஜதந்திரம் இல்லை.
அது சுயநலம் சார்ந்த சந்தர்ப்பவாத ஒரு அரசியல். நாம் அதை பொருட்படுத்தவில்லை, அதை ஈடுபாடு காட்டவில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எந்த நிபந்தனையும் இல்லாமல் ஒரு கூட்டணியிலே தொடர்கிறோம் என்றால் அதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும். அதற்கு ஒரு தெளிவு வேண்டும். அதற்கு ஒரு தொலைநோக்கு பார்வை வேண்டும்.
இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாத புள்ளர்கள், அற்பர்கள் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்கிற வகையில் நமக்கு எதிரான அவதூறுகளை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி, பிற அரசியல் கட்சிகள் போல் இல்லாமல் ஒரு முன்மாதிரியாக இயங்கக்கூடிய அரசியல் கட்சி என்பதை காலம் சுட்டிக்காட்டி வருகிறது” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில்தான் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், ‘‘திருமாவளவன் மன அழுத்தத்தோடு இருக்கக் கூடாது என சகோதரியாக நான் வேண்டிக் கொள்கிறேன். அவர் திமுகவால் தான் மன அழுத்தில் இருக்கிறார் என நான் கருதுகிறேன். பாஜக – அதிமுக கூட்டணியை கேள்வி கேட்கும், திமுக கூட்டணி குழப்பத்தில் உள்ளது.
துணை முதலமைச்சர் என்று போஸ்டர் ஒட்டிய செல்வப்பெருந்தகை மறைமுகமாக எச்சரிக்கப்பட்டு, போஸ்டர்கள் அகற்றப்பட்டன. சாம்சங் தொழிலாளர்களுக்காக பேசிய கம்யூனிஸ்டுகள் ஒட்டாத நீரை போல இருந்து கொண்டிருக்கின்றனர்.
வேல்முருகன் எப்படி பேச வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார், திருமாவளவன் அவர்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார். அந்த வகையில், பலமாக இருப்பது அதிமுக பாஜக கூட்டணி, மன அழுத்தமாக இருப்பது திமுக கூட்டணி தான் என திருமாவளவன் மறைமுகமாக சொல்லிவிட்டார் என்பது எனது கருத்து’’ எனத் தெரிவித்தார்.
வரவிருக்கிற 2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க.வில் திருமாவுக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தி.மு.க.வில் 5 சீட்டுகளுக்கு மேல் கொடுப்பது கஷ்டம். இந்த நிலையில்தான் திருமா மனம் விட்டுப் பேசியிருக்கிறார்.