நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, அவரது மகன் அருண் நேரு மற்றும் அவரது சகோரர்கள் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை இரண்டு நாட்கள் சோதனை நடத்தியது. இந்த நிலையில்தான் அமைச்சர் பிரம்மாண்ட ‘கிடா’ விருந்து நடத்தியிருக்கிறார். இதில் நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

திருச்சி பஞ்சப்பூரில், 40 ஏக்கர் பரப்பில், 492 கோடி ரூபாய் செலவில், 2022ல் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி துவங்கியது. மூன்றாவது ஆண்டாக நடந்து வரும் பணிகள் முடிந்து, வரும் மே, 9 அன்று முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்படுகிறது.

பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா சிறப்பாக நடக்க வேண்டி, அப்பகுதியில் உள்ள ரெட்டமலை ஒண்டி கருப்பசாமி கோவிலில், நேற்று, 15 ஆட்டு கிடாக்கள் வெட்டி, அமைச்சர் நேரு வழிபாடு நடத்தினர். இதற்காக நேற்று காலை, 9 மணிக்கு, ஒண்டி கருப்பசாமி கோவிலுக்கு வந்த அமைச்சர் நேரு, அங்கு வழிபாடு நடத்தி, கிடாக்கள் வெட்டும் வரை இருந்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

‘திறப்பு விழா’ வேண்டுதலுக்காக வெட்டப்பட்ட கிடாக்கள் மற்றும் 250 கிலோவுக்கு மேல் கோழிக்கறி சமைக்கப்பட்டு, கோவில் வளாகத்திலேயே, தி.மு.க., கட்சி நிர்வாகிகளுக்கு, நேற்று மதியம் கறி விருந்தளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, அமைச்சர் நேரு அறிவுறுத்தலில் ஏற்பாடு செய்த முக்கிய நிர்வாகி, சிலரை இந்த விருந்திற்கு அழைக்க வில்லையாம்.

இதனால், அமைச்சர் கே.என்.நேரு மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் திருச்சி மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள்! தவிர, அமலாக்கத்துறை ரெய்டுக்கு இடையே அமைச்சர் கே.என்.நேருவின் ‘கிடா’ விருந்துதான் மலைக்கோட்டை மாவட்டத்தில் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal