தமிழக பாஜகவின் 13-வது மாநிலத் தலைவர் ஆகிறார் நயினார் நாகேந்தரன். இது குறித்து நாளை (ஏப்.12) அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக மாநில தலைவர் தேர்தலுக்கு விருப்ப மனு தாக்கல் இன்று (ஏப்.11) நடைபெற்றது. தமிழக பாஜகவில் மாநில தலைவர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இவ்விரு பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என தமிழக பாஜக தேர்தல் அதிகாரி எம்.சக்கரவர்த்தி அறிவித்திருந்தார். இதற்கான, விருப்பமனுக்களை இன்று மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டியிட விருப்பமுள்ளவர்கள் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாஜக நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு விருப்பமனு அளித்தார். அவரைத் தவிர, மாநிலத் தலைவர் பதவிக்கு வேறு யாரும் விருப்பமனு அளிக்காததால், போட்டியின்றி அப்பதவிக்கு அவர் தேர்வு செய்யப்படுவதாக கட்சியின் தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதையடுத்து, தமிழக பாஜகவின் 13-வது மாநிலத் தலைவர் ஆகிறார் நயினார் நாகேந்தரன். இது குறித்து நாளை (ஏப்.12) அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனியார் ஓட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தார். இதற்காக, அங்கு தேசிய ஜனநாயக கூட்டணி என்று தலைப்பிடப்பட்ட பேனர் வைக்கப்பட்டிருந்தது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்காத நிலையில், அந்த பேனர் மாற்றப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி என குறிப்பிடப்பட்டிருந்த அந்த பேனரில் நயினார் நாகேந்திரனின் படம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.